Monday, December 30, 2019

•இந்திய உளவு (பாகம் - 3)

•இந்திய உளவு (பாகம் - 3)
இந்திய உளவுப்படையானது வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சினியர் என்ற புலிப்போராளியை அனுப்பியதையும் அதை பொட்டு அம்மான் முறியடித்ததையும் கடந்த பதிவில் கூறியிருந்தேன்.
அவ்வாறு இந்திய உளவுப்படையால் அனுப்பப்பட்ட இன்னொரு புலிப் போராளியான கிருபன் என்பவர் பற்றி இந்த பதிவில் கூறப் போகிறேன்.
கிருபனை கைது செய்வதற்கு முன் கிருபன் என்று நினைத்து நிருபன் என்ற ரெலோ போராளியை பொலிஸ் கைது செய்திருந்தது.
அதன்பின்பு கிருபன் கைது செய்யப்பட்டபோது தாங்கள் தவறுதலாக நிருபனைக் கைது செய்து விட்டோம் என்பதை பொலிஸ் அதிகாரிகள் உணர்ந்துகொண்டாலும் நிருபனை அவர்கள் விடுதலை செய்யவில்லை.
நிருபன் ஒரு பொலிஸ் அதிகாரியின் மகளை காதலித்து கலியாணம் செய்து இருந்தார். அந்த பொலிஸ் அதிகாரியால்கூட தனது மருமகனான நிருபனை விடுதலை செய்விக்க முடியவில்லை.
நிருபனை புலி என்று குறிப்பிட்டு அவர்மீது பொய் வழக்குபோட்டு அவரை பல வருடங்களாக சிறையிலும் சிறப்புமுகாமிலும் அடைத்து வைத்திருந்தது இந்திய அரசு.
இந்த நிருபனும் வேலுர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தார். அவரே என்னிடம் தனது இந்த சோகக்கதையை கூறினார்.
வேலுர் சிறப்புமுகாமில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை ஒருநாள் திடீரென்று சென்னை சிறையில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கிருபனை பொலிசார் அழைத்து வந்தனர்.
வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தனது சக போராளிகளை பார்வையிட அனுமதி கேட்டதாகவும் அதற்கமைய தன்னை அழைத்து வரப்பட்டதாக கிருபன் கூறினார்.
காயம்பட்ட போராளிகளுக்கு மருத்தவ சிகிச்சைகூட அளிக்க மறுத்த அரசு தடா சட்டத்தில் சிறையில் இருக்கும் ஒரு புலிப் போராளியான கிருபனை சிறப்புமுகாமுக்கு அழைத்துவர அனுமதி வழங்கப்பட்ட விடயம் அங்கிருந்தவர்களால் நம்ப முடியாததாக இருந்தது.
அதைவிட ஆச்சரியம் என்னவெனில் திடீரென்று கிருபன் என்னனை அழைத்து பேசினார். என்னிடம் பேசும்போது தான் விரைவில் சிறையில் இருந்து தப்ப இருப்பதாகவும் தமிழ்நாட்டில் சில நாட்கள்; தங்குவதற்கு எனது தமிழ்நாட்டு தோழர்கள் உதவுவார்களா எனக் கேட்டார்.
நான் புலிகள் இயக்கத்தவன் இல்லை. எனக்கு கிருபனை அதற்கு முன்னர் தெரியாது. எனவே திடீரென்று அவர் என்னை அழைத்து இந்த உதவியைக் கேட்டது எனக்கு குழப்பமாக இருந்தது.
அதன்பின் சில நாட்களில் அவர் கூறியபடி சிறையில் இருந்து தப்பிச் சென்று விட்டார். எனவே அவர் தப்பிய செய்தி எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால் அவர் தப்பிய விதம்தான் ஆச்சரியமாக இருந்தது.
முதலில் அனுப்பிய எஞ்சினியர் பிடிபட்டதால் அடுத்தமுறை சந்தேகம் வராத வகையில் கிருபனை அனுப்ப வேண்டிய அவசியம் இந்திய உளவுப்படைக்கு இருந்தது.
அதன்படி கிருபன் தப்பிச் செல்வதற்கான நாடகம் அரங்கேற்றப்பட்டது. சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஒரு பொலிசாரை சுட்டுக் கொன்று விட்டு தப்புவதாக அது திட்டமிடப்பட்டிருந்தது.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய உளவுப்படையானது தங்களில் ஒரு பொலிசாரைப் பலி கொடுக்கவும் தயங்கவில்லை என்பதே.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்திய உளவுப்படை இச் சம்பவம் மூலம் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்க நினைத்தது.
முதலாவது மாங்காய், சந்தேகம் வராமல் கிருபனை அனுப்பி வைப்பது
இரண்டாவது மாங்காய், தமிழ் பொலிசாரை கொல்வதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் புலிகள் மீது வெறுப்பு ஏற்படும் என நினைத்தது
மூன்றாவது மாங்காய், இந்த சம்பவத்தை காரணம்காட்டி சிறையில் இருக்கும் மற்ற போராளிகள் மீது பலத்த பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பது.
ஆனால் தப்பிச் சென்ற கிருபனை கைது செய்து இந்திய உளவுப்படையின் திட்டத்தை பொட்டு அம்மான் முறியடித்துவிட்டார்.
உண்மையில் சொல்லப்போனால் இந்திய உளவுப்படையின் அனைத்து மாங்காய்களையும் பொட்டு அம்மான் அரைத்து சட்னியாக்கிவிட்டார் என்றே கூறவேண்டும்.
( இன்னும் வரும்)
குறிப்பு - கிருபன் தப்பிச் செல்வதற்கு முன்னர் இரு பொலிசார் மட்டுமே என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கிருபன் தப்பிச் சென்றபின் அதைக் காரணம் காட்டி எனக்கு புலி முத்திரை குத்தி பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ஒரு எஸ்.பி தலைமையில் சுமார் 30 பொலிசார் காவலுடன் நான்கு வண்டிகளில் என்னை நீதிமன்றம் அழைத்துச் சென்றர்.
இதில் வேடிக்கை என்னவெனில் ஒருமுறை என்னை திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது எனது வாகன தொடரணி செல்லும்வரை அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை ரோட்டில் மறித்து வைத்திருந்தார்கள்.
கீழே உள்ள படம் இரண்டு பொலிசார் என்னை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment