Sunday, May 28, 2023

இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை?

•இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை? ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் அவர்களுக்கு நேற்றைய தினம் சிலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் அவரை நினைவு கூர்வது ஆச்சரியமாக இருக்கிறது. சரி. பரவாயில்லை. ஆனால் நினைவு கூர்வது என்ற போர்வையில் அவர்கள் இந்திய ஆதரவை மீண்டும் விதைக்க முனைவது மோசமானது. கண்டிக்கப்பட வேண்டியது. இந்திய அரசின் உதவியுடன் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று சிறீயண்ணா கூறியது உண்மைதான். ஆனால் அதன் பின் பல பொங்கல் வந்து போய்விட்டது. அவர் கூறிய தமிழீழம் பிறக்க இந்தியா உதவி செய்யவில்லை. மாறாக, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்திய அரசின் உதவியுடனேயே நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை எம் கண் முன்னே கண்டோம். சிங்கள அரசு தமிழினப் படுகொலை செய்வதற்கு உதவியதோடு இன்று இக் கணம்வரை அந்த சிங்கள அரசை ஆதரித்து பாதுகாத்து வருவதும் இந்த இந்திய அரசே. அதை உணராமல் இப்பவும் எப்படி இவர்களால் “ ஈழவிடுதலைப் போராட்டம் இந்திய பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்தது” என்று கூறிக்கொள்ள முடிகிறது? சரி. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை. குறைந்தபட்சம் தன்னை ஆதரித்த தனது விசுவாசியான சிறீயண்ணாவுக்காவது உதவியதா? இல்லையே. இந்திய உளவுப்படை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரத்தை சுட்டுக் கொன்றவர் சிறீயண்ணா. பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜலிங்கம் மற்றும் துரைரத்தினம் இருவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரின் வடமராட்சி தளபதி தாஸ் அவர்களை கொல்லவில்லை. இவ்வாறு இந்திய அரசின் விசுவாசியான சிறீயண்ணா யாழ்ப்பாணத்தில் கொல்லப்படும்போது இந்திய அரசு அவரை காப்பாற்றவில்லை. அவரை எப்படி இந்திய அரசு காப்பாற்ற முடியும் என கேட்க விரும்புவர்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். இதே யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற இரு வெள்ளை இனத்தவர்களை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது. சிறையில் உள்ள போராளிகள் அவைரும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை சுட்டுக் கொல்லப்போவதாக ஈபிஆர்எல்எவ் இயக்கம் அறிவித்தது. உடனே அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறையில் உள்ள போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் ஜே.அர்.ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு “போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம். நான் அலன் தம்பதிகளை விடுதலை செய்விக்கிறேன்” என்று கூறினார். இதையடுத்து சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்கதலைவர் பத்மநாபா கைது செய்யப்பட்டு ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார் அந்த இந்திரா அம்மையார். இப்போது எனது கேள்வி என்னவெனில் ஜே.அர் ஜெயவர்தனா கேட்காமலே இரண்டு வெள்ளை இனத்தவர்களுக்கு உதவிய இந்திய அரசு ஏன் தனது விசுவாசியான சிறீயண்ணாவை காப்பாற்றவில்லை? உண்மையில் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் சிறீயண்ணாவை காப்பாற்ற இந்திய அரசு முயலவில்லை. ஏனெனில் இந்திய அரசைப் பொறுத்தவரையில் போராளிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும் என்பதே விருப்பம். இது இன்று சிறீயண்ணாவின் பெயரால் இந்திய புகழ்பாடுவோருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் தமது சொந்த நலன்களுக்காக இந்திய ஆதரவை விதைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

No comments:

Post a Comment