Sunday, May 28, 2023

சற்றும் மனம் தளராத மன்னன்

சற்றும் மனம் தளராத மன்னன் விக்கிரமாதித்தன் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறினான் என்று அம்புலிமாமா புத்தகத்தில் படித்திருப்போம். அது குழந்தைகளுக்கான கதை. எனவே மன்னன் ஏன் மீண்டும் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறுகின்றான் என்று யாரும் கேட்பதில்லை. அக் குழந்தைகளின் கதையைவிட கேவலமான ஒரு கதை எம் மத்தியில் அடிக்கடி அரங்கேறுகின்றது. ஆம். அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணக் கதை. ஏன் போகிறார்கள்? எத்தனை தரம் போகிறார்கள்? என்று யாரும் கேட்பதில்லை. கடந்த வருடம் தீர்வு 13ஐக் கேட்டு இந்திய தூதர் ஊடாக டில்லிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர். கடிதம் கிடைத்தது என்றுகூட இதுவரை டில்லி பதில் அளிக்கவில்லை. இதுதான் இவர்களுக்கு டில்லி அளிக்கும் மதிப்பு. இந்நிலையில் மீண்டும் இவர்கள் டில்லி செல்லப்போவதாக அறிவித்துள்ளனர். முன்பு சம்பந்தர் ஐயா அடிக்கடி டில்லி செல்வார். ஆனால் அது அவருடைய இருதய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக என்று பின்னர் தெரியவந்தது. அதுபோல் சுரேஸ் பிரேமசந்திரன் டில்லியில் மருத்துவம் படிக்கும் தன் மகளை பார்வையிட சென்று வந்தார். செல்வம் அடைகலநாதன் திருச்சியில் இருக்கும் தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனிக்க சென்று வந்தார். வேடிக்கை என்னவெனில் அடிக்கடி இந்தியா செல்லும் இவர்கள் அகதிமுகாம்களுக்கு சென்று அகதிகளை சந்திப்பதில்லை. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி குரலும் கொடுப்பதில்லை.

No comments:

Post a Comment