Sunday, May 28, 2023

மார்க்ஸ் என்னும் அற்புதம்!

• மார்க்ஸ் என்னும் அற்புதம்! இவர் மாட்டு தொழுவத்தில் பிறக்கவில்லை இவர் பிறந்தபோது வானில் நட்சத்திரங்கள் தோன்றவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இவர் தலையின் பின்னால் ஒளிவட்டம் இருக்கவில்லை. இவர் இறந்தபோதுகூட இவரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் முப்பது பேருக்குள்தான் இருந்தனர். ஆனாலும் உலகைக்குலுக்கிய பெரும் புரட்சிப் புயல்களின் மையம் இவரே. இவர் ஒரு அற்புதமே ! ஏனெனில் இன்றும்கூட இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கு காரணம் முதலாளித்துவம் என்பதை படித்தவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத நிலையில் முதலாளித்தவம் ஆரம்பித்த நிலையிலேயே அதன் நெருக்கடியை ஆய்ந்து கூறியவர் இவர். ஆம். மார்க்சிசம் வெறும் தத்துவம் இல்லை. அது ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். “உலகம் முழுக்க மனித இனத்திற்கு எதிராக, இயற்கைக்கு எதிராக நடக்கும் அத்துனை அழிவு சார்ந்த நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் முதலாளித்துவம் தான்” -கார்ல் மார்க்ஸ் குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும். எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. கொரோனோ மற்றும் உக்ரைன் போர் நெருக்கடியானது கார்ல் மார்க்ஸ் கருத்துகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடிகள் தோன்றியபோது எப்படி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொண்டதோ அதேபோன்று இம் முறையும் அது தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என சிலர் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment