Sunday, May 28, 2023

மறையாது மடியாது நக்சல்பாரி

மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி! இன்று நக்சல்பாரி எழுச்சியின் 56 வது ஆண்டாகும் (24.05.1967) நக்சல்பாரி கிளர்ச்சி துவங்கி 56 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அது விவசாயிகளின் விடியலுக்காகத் துவங்கியது. அந்த எழுச்சிக்குக் காரணம் ஓர் பழங்குடிப் பெண்மணி. அவரின் பெயர் ஷாந்தி முண்டா. இப்போது ஷாந்தி முண்டாவிற்கு 80 வயதாகிறது. 56 ஆண்டுகளுக்கு முன்பு மே 24 வந்தபோது ஷாந்தி முண்டா தன் 20 வயதுகளில் இருந்தார். குத்தகை விவசாயிகள் தங்களுக்குக் விளைச்சலில் கூடுதல் பங்கு வேண்டும் என்று கோரி, போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தின் போது சோனம் வாங்டி என்ற போலீஸ்காரர் போராடிய பெண் ஒருவரைத் தாக்கினார். ஷாந்தி முண்டாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஷாந்தி முண்டாவின் முதுகில், பழங்குடிகள் வழக்கப்படி, அவரின் 15 மாதக் குழந்தையைக் கட்டி சுமந்துகொண்டிருந்தார். இருந்தபோதும், அவர் அந்த போலீஸ்காரரை தாக்கினார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டனர். போலீஸ்காரர் செத்து வீழ்ந்தார். மறுநாள் படையினர் திரும்பி வந்தனர். தாக்குதல் தொடுத்தனர். 11 விவசாயிகளும் பழங்குடியினரும் கொல்லப்பட்டனர். மே 25.. நக்சல்பாரி புரட்சி வெடித்தது.. கிளர்ச்சி நாட்டின் பற்பலப் பகுதிகளுக்குப் பரவியது. இதன்பின்னா ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை நக்சல்பாரிகள் (நக்சலைட்டுகள்) என்று அழைப்பது வழக்கமானது. ஏனென்றால் வடக்கு வங்கத்தைச் சேர்ந்த நக்சல்பாரி என்ற கிராமத்தில்தான் முதல் பொறி எழுந்தது. ஷாந்தி முண்டாவின் வீட்டுச் சுவர் மண் சுவர்தான். மேலே அஸ்பெஸ்ட்டாஷ் கூரை. அமர்வதற்கு பிளாஸ்டிக் சேர்தான் இருக்கிறது. வேறு சொத்துகள் ஏதும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் ஷாந்தி முண்டா. “முன்பு நிலப்பிரபுக்கள் சுரண்டினார்கள். இப்போது அரசு சுரண்டுகிறது“ என்கிறார். நக்சல்பாரியில் ஆரம்பமான இந்த கிளர்ச்சி தமிழ்நாட்டிற்கும் பரவியது. தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், அப்பு, பாலன் போன்றவர்கள இந்த எழுச்சியில் உருவாகியவர்கள். இன்று இந்த நக்சல்பாரி இயக்கம் இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் தேபக்தர்கள் என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவர் நக்சலைட்டோ அல்லது மாவோயிஸ்டோ என்பதற்காக அவரை கைது செய்ய முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக பெண் வழக்கறிஞர் ஒருவரை மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தி சுட்டுக்கொன்றுள்ளது கேரள பொலிஸ். சுட்டுக் கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

No comments:

Post a Comment