Wednesday, March 31, 2021

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக தடாச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கட்சி மாறினால் வழக்கை வாபஸ் பெற்று விடுதலை செய்வதாக சிறையில் வந்து பேரம் பேசியபோதும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் மதுரை சிறையில் இருந்தபோது அச் சிறையில் இருந்த ஈழத் தமிழராகிய நாம் உண்ணாவிரதம் இருந்தபோது எமக்கு ஆதரவாக அவரும் உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் எமக்காக உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரைப் பார்க்க வந்த திமுக மாவட்ட தலைவர்களும் சிறைக்கு வெளியே குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் சிறை அதிகாரிகள் வேறு வழியின்றி எமது கோரிக்கையின்படி எம்மைத் தாக்கிய சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்கள். உண்ணாவிரதம் முடிவுற்றது என்று அதிகாரிகள் கூறியதை அவர் நம்பவில்லை. அப்புறம் நான் நேரடியாக கூறிய பின்பே அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். போராளிகளால் “சுப்பக்கா” என்று அன்பாக அழைக்கப்பட்டவர். அவர் அங்கம் வகிக்கும் திமுக கட்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஈழத் தமிழர் ஆதரவு என்பது மறக்க முடியாதது. பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment