Saturday, November 30, 2019

நான் 2013 முதல் இதுவரை 3051 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன்

நான் 2013 முதல் இதுவரை 3051 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன். எந்தவொரு பதிவும் அனைவராலும் முழுமையாக எற்றுக் கொள்ளப்பட்டதில்லை.
யாராவது ஒரு சிலர் எனது பதிவுகளை எதிர்த்து விமர்சிப்பது குறித்து நான் ஆச்சரியப்பட்டதில்லை. மாறாக யாரும் விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும் என நான் நம்பியிருந்தால் இந் நேரம் குறைந்தது நான்கு புரட்சிகளாவது நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் உண்மை யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும்.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் எனது கருத்துகளை விமர்சிப்பவர்கள் தமது அறிவின் உயரத்தை மட்டும் காட்டவில்லை, தாம் எந்த வர்க்கத்தின் நலன் குறித்து பேசுகிறோம் என்பதையும் காட்டுகிறார்கள்.
ஏனெனில் எந்தவொரு சொல்லின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என லெனின் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் நான் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
எனவே எனது கருத்துக்கள் தமிழ் மக்களை அடக்கி ஆளும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதை அறிவேன்.
ஆனால் தாங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் சிலர் எரிச்சல் அடைவதன் மூலம் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களை மக்களுக்கு இனங்காட்டவாவது நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறக்கிறது.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் நான் முகநூலில் இதுவரை எழுதிய 3051 பதிவுகளையும் வாசிக்கலாம்.

No comments:

Post a Comment