Saturday, December 31, 2016

•உலகம் பூராவும் நத்தார் தினம் கொண்டாடப்படுகிறது இந்த ஈழ அகதிகள் மட்டும் பட்டினி இருக்கிறார்கள்!

•உலகம் பூராவும் நத்தார் தினம் கொண்டாடப்படுகிறது
இந்த ஈழ அகதிகள் மட்டும் பட்டினி இருக்கிறார்கள்!
உலகம்பூராவும் மக்கள் இயேசு பிறப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள்கூட நத்தார் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தமது விடுதலைகோரி 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
11 அகதிகள் கடந்த 23.12.2016 முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில் இருவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை.
அதுமட்டுமல்ல தமிழக அரசு சார்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரை அகதிகளை சென்று பார்வையிடவும் இல்லை.
இந்திய அரசு இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல காந்தி சிலைகளை நிறுவுகிறது. ஆனால் இந்தியாவில் ஈழத் தமிழ் அகதிகளின் உண்ணாவிரதத்தை கண்டு கொள்ள மறுக்கிறது.
மகாத்மா காந்தியை இதைவிட வேறு யாரால் இந்தளவுக்கு அவமானப்படுத்த முடியும்?
உண்ணாவிரதம் இருப்பவர்களை தமிழக பொலிசார் அச்சுறுத்துகிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்யப்போவதாக மிரட்டுகிறார்கள்.
என்னே கொடுமை இது? இந்த அநியாயத்தை கேட்பதற்கு தமிழகத்தில் ஒரு தலைவர்கூட இல்லையா?
இந்தியாவில் பசு மாட்டுக்காக கவலைப்பட ஒரு பிரதமர் இருக்கிறார். ஆனால் இந்த ஈழ அகதிகளுக்காக கவலைப்படுவதற்கு யாரும் இல்லையே!
இந்தியாவில் தீபேத் அகதிகள் சுதந்திரமாக திரிகிறார்கள். பர்மா மற்றும் பங்களாதேஸ் அகதிகள் சுதந்திரமாக திரிகிறார்கள். ஆனால் ஈழ தமிழ்அகதிகள் மட்டும் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவது ஏன்?
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஈழ அகதிகளை மட்டும் சட்டவிரோதமாக சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஈழத்தாய் ஜெயா அம்மையார் இருந்தார். உலக தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி இருக்கிறார். இவர்கள் எல்லாம் இருந்தும் இவர்கள் கண் முன்னே ஈழ அகதி சிறப்புமுகாமில் வாடுகின்றானே!
தம் கண் முன்னே தமது அதிகாரத்தின் கீழ் உள்ள ஈழ தமிழ் அகதியையே விடுதலை செய்யாத இந்த தலைவர்கள் தமிழீழ விடுதலைக்கு உதவப்போகிறார்கள் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment