Saturday, October 26, 2019

இந்திராகாந்தியின் இன்னொரு முகம்

•இந்திராகாந்தியின் இன்னொரு முகம்
அல்லது அவரது உண்மை முகம்!
இந்திராகாந்திதானே போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் தந்தவர். அவர் இருந்திருந்தால் தமிழீழம் பெற்று தந்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்திராகாந்தி மட்டுமல்ல மகாத்மா காந்தியே இருந்தாலும் தமிழீழம் அமைய இந்தியா ஒருபோதும் உதவமாட்டாது என்பதே உண்மை.
ஆனால் அந்த சிலர் “ பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஸ் உருவாக்கிய இந்திராகாந்தி இருந்திருந்தால் இலங்கையை பிரித்து தமிழீழம் அமைத்திருப்பார்” என்கிறார்கள்.
பாகிஸ்தானை பலவீனப்படுத்தவே பங்களாதேஸ் பிரிவினையை இந்திராகாந்தி ஆதரித்தார். இந்திய நலனுக்காகவே இதனை அவர் செய்தார்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழீழ பிரிவினையை ஆதரிப்பது இந்திய நலனுக்கு உகந்தது அல்ல என்றே அவர் கருதினார். அவர் முழு இலங்கையையும் ஆக்கிரமிப்பதற்காகவே ஈழப் போராளிகளுக்கு உதவி செய்தார்.
அவர் ஒருபுறத்தில் அமிர்தலிங்கத்தையே ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக வெளி உலகிற்கு காட்டினார்.
ஆனால் மறுபறத்தில் அதே அமிர்தலிங்கம் தடுத்தும் அவரையும்மீறி போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார்.
அப்போது ஈழத்தில் 36 போராளிகள் இயக்கங்கள் இருந்தன. ஆனால் இந்திராகாந்தி 5 இயக்கங்களுக்கு மட்டும் பயிற்றி வழங்கினார். இந்த ஜந்து இயக்கங்களை மட்டும் என்? எப்படி? அவர் தேர்ந்தெடுத்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை.
இயக்கங்களுக்கு இந்திய அரசு செய்த உதவி என்பது இயக்கங்களை வீங்கவைத்து பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி என்ற விமர்சனம் அப்போது இருந்தது.
இந்திராகாந்திதான் இவர்களுக்கு முதன்முதலாக பயிற்சியும் ஆயுதமும் கொடுத்தார் என்பது தவறு. ஏனெனில் அதற்கு முன்னரே இவர்கள் பயிற்சி வசதி மற்றும் ஆயுதங்களை கொண்டிருந்தார்கள்.
புளட், ஈபிஆர்எல்எவ, ஈரோஸ் புலிகள் அமைப்புகள் ஏற்கனவே லெபனானில் பாலஸ்தீன இயக்கங்களிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ரெலோ இயக்கம் தமிழ்நாட்டில் தனியாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஈழத்தில் வன்னியில் சில இயக்கங்களுக்கு இரகசிய பயிற்சிமுகாம்கள் இருந்திருக்கின்றன.
எனவே இந்திராகாந்தி உதவி செய்வதற்கு முன்னரே இயக்கங்களிடம் பயிற்சி வசதி மற்றும் ஆயுதங்கள் இருந்தன. இந்திராகாந்தி உதவி செய்யாவிட்டாலும் இயக்கங்கள் இந்த வசதிகளை பெருக்கிக்கொள்ளும் திறமை அவர்களிடம் இருந்தது.
இதை புலிகள் பின்னாளில் இந்தியாவை மீறி ஈழத்தில் செய்துகாட்டியிருக்கின்றார். இந்திய உதவி இன்றி பலமான இயக்கம் ஒன்று வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
இந்தியா பயிற்சி வழங்கிய போராளிகளின் எண்ணிக்கை மொத்தம் 600 பேர்அளவில்தான் இருக்கும் . அவர்கள் வழங்கிய ஆயுதங்களும் சொற்பமானவை.
ஆனால் இந்தியா போராளிகளுக்கு கொடுத்த நெருக்கடியோ இவற்றைவிட பலமடங்கு அதிகம்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்த இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் வெளிப்படையாக இயங்க அனுமதிக்கவில்லை.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் சென்னையில் அலுவலகம் அமைத்து வெளிப்படையாக இயங்க அனுமதித்த இந்திய அரசு ஈழப்போராளி இயக்கங்களை அவ்வாறு இயங்க அனமதிக்கவில்லை.
சென்னையில் இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்த்தினரின் செலவுகளுக்கு இந்திய அரசு மாதா மாதம் பணம் வழங்கியது. ஆனால் ஈழப் போராளிகளுக்கு பணம் வழங்காதது மட்டுமன்றி அவர்களிடமிருந்த பணத்தையும் பல சமயங்களில் பறித்தது.
ரெலோ இயக்கம் சங்கானை வங்கியில் கொள்ளையடித்த 50 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை தமிழ்நாட்டில் இருக்கும் தமது போராளிகளின் சாப்பாட்டு செலவிற்காக கொண்டு சென்றது. ஆனால் தமிழ்நாடு பொலிஸ் அதனை பறித்துக்கொண்டது.
அதேபோல் தம்பாபிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தினர் காத்தான்குடி வங்கியில் கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாட்டில் வைத்திருந்தபோது தமிழ்நாடு பொலிஸ் அவர்களிடம் இருந்து ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடுகளை பறித்துக்கொண்டது.
அதுமட்டுமன்றி இபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்த அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர்களை கடத்தினார்கள். அவர்கள் விடுதலை செய்யவேண்டும் என்றால் சிறையில் உள்ள போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.
அதன்படி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் வைத்திருந்த போராளிகளை விடுதலை செய்ய முன்வந்தார்.
ஆனால் இந்திராகாந்தியோ போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம் என்று ஜெயவர்த்தனாவிடம் கூறிவிட்டு சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்க தலைவர்களை இரகசியமாக கைது செய்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்யவைத்தார்.
அதேபோல் புளட்(PLOTE) இயக்கம் வெளிநாட்டில் இருந்து இரகசியமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தது. ஆனால் இதை அறிந்த இந்திய அரசு தமிழ்நாடு பொலிஸ் மூலம் அவற்றை கைப்பற்றிக் கொண்டது. அவற்றை புளட் இயக்கத்திற்கு வழங்கவில்லை.
(தொடரும்)

No comments:

Post a Comment