Saturday, October 26, 2019

நம்புங்கள் ! இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று!

நம்புங்கள் !
இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று!
இதோ இவர்கள் யார் என்று தெரிகிறதா?
இந்தியா தமக்கு உதவும் என்று நம்பி அகதியாக இந்தியா சென்ற ஈழத் தமிழ் அகதிகள் இவர்கள்.
இவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?
இவர்கள் தற்போது திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
புலிகளைத்தானே சிறப்புமுகாமில் இந்தியஅரசு அடைக்கும். நம்பி வந்த அகதிகளை ஏன் அடைக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா?
ஆச்சரியப்படாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இவர்களின் கதையைக் கேளுங்கள்.
இவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை. எங்கேயும் கொள்ளையடிக்கவில்லை. எந்த பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடவும் இல்லை.
இவர்கள் செய்த ஒரேயோரு தவறு தமிழனாக பிறந்து இந்தியாவை நம்பி அகதியாக வந்ததுதான்.
இந்தியாவில் வாழ முடியாது என்றவுடன் ஏதாவது வெளிநாட்டுக்கு போய் வாழ ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் வாழவும் விடாமல், தப்பி போகவும் விடாமல் பிடித்து சிறையில் அடைத்ததுள்ளது இந்திய அரசு. ஏனெனில் நம்புங்கள். இந்தியஅரசு ஈழத் தமிழனுக்கு உதவும் என்று.
30 வருடங்களாக அகதியா வாழ்ந்தவர்களுக்கு கைது செய்து பாஸ்போட் கேஸ் போடும் அற்புதமான நாடு உலகில் இந்தியா மட்டுமே. ஏனெனில் நம்பங்கள் இந்தியஅரசு ஈழத் தமிழனுக்கு உதவும் என்று
.
பாஸ்போட் வழக்கிற்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையே ஆறு மாதங்கள்தான். ஆனால் இவர்களுக்கு 6 மாதமாகியும் குற்றப்பத்திரிகைகூட வழங்கப்படவில்லை.
இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்கிறார்கள். அப்படியென்றால் ஈழத் தமிழ்அகதியையும் சமமாகத்தானே நடத்தப்பட வேண்டும்?
இறுதியாக இவர்கள் தமது சொந்த செலவில் ஜாமீன் பெற்றுக் கொண்டார்கள். உடனே இந்திய அரசு சிறைவாசலில் மீண்டும் இவர்களை கைது செய்து சிறப்புமுகாமில் அடைத்துள்ளது. ஏனெனில் நம்புங்கள் இந்தியஅரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று.
இவர்களுடைய குடும்பத்தவர்கள் தற்போதும் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில்தான் வாழ்கின்றனர். எனவே இவர்களை தமது குடும்பத்தவருடன் சேர்ந்து வாழவிடாமல் எதற்காக சிறப்புமுகாமில் இந்திய அரசு அடைத்துள்ளது? ஏனெனில் நம்புங்கள் இந்தியஅரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று.
இப்போது அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தம்மீதான வழக்கை விரைந்து முடிக்கும்படி கோரியே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அகதிகளுக்கு பாஸ்போட் கேஸ் போட்டதே தவறு. அதைவிட அதற்குரிய தண்டனைக்காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்து விட்டார்கள். இருந்தும் வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை.
தாமதிகககப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இந்த ஈழ அகதிகளுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நம்புங்கள் இந்தியஅரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று.

No comments:

Post a Comment