Tuesday, May 30, 2017

•100வது நாள்! காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!

•100வது நாள்!
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!
இன்று காணாமல்;போனவர்களின் உறவுகளின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. இதுவரை அரசு அவர்களின் பிரச்சனையை தீர்க்கவில்லை.
அரசு இந்த பிரச்சனை குறித்து அக்கறை இன்றி இருக்கிறது. எனவே இவர்களின் இந்த போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகிறதோ தெரியவில்லை.
100 வது நாளை முன்னிட்டு சர்வமத பிரார்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இந்த மக்கள். அரசியல் தலைவர்களையும் மக்களையும் கலந்து கொண்டு தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து எட்டு வருடமாகிறது. இன்னும் காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?
இருந்தால் இருக்கின்றார்கள் என்றோ இல்லையென்றால் இறந்துவிட்டார்களோ என்றோ ஒரு முடிவை சொல்ல வேண்டியதுதானே.
எந்த முடிவையும் கூறாமல் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? இந்த மக்களின் போராட்டம் குறித்து பதில் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
இந்த மக்கள் நிலம் கேட்கவில்லை
இந்த மக்கள் வேலை கேட்க வில்லை
இந்த மக்கள் வீடு கேட்க வில்லை
இந்த மக்கள் நிவாரணம் கேட்க வில்லை
இந்த மக்கள் கேட்பதெல்லாம் தமது உறவுகள் எங்கே என்பது மட்டும்தான்.
ஏன் அவர்களுக்கு ஒரு பதிலை கூறாமல் அரசு இழுத்தடிக்கின்றது?
தமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்
தமிழ் மக்களுக்கு மாகாணசபை முதல்வர் இருக்கிறார்
தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மக்களுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மக்களுக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு மேலாக தமிழ் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ பிரதமரும் இருக்கிறார்.
இத்தனை பேர் இருந்தும் இந்த காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?
காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கே தீர்வு காண முடியாதவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்று எப்படி நம்புவது?
தமக்கு சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் இந்த மக்களுக்கு ஏன் தீர்வு வாங்கி கொடுக்க முடியவில்லை?
தமது மகளின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட ஜனாதிபதியை அழைத்து வந்த எம்.பி சரவணபவனால் ; என் இந்த மக்களிடம் ஜனாதிபதியை அழைத்து வர முடியவில்லை?
பிரதமர் ரணிலை குடத்தனைக்கு அழைத்து சென்று நுங்கு வெட்டிக் கொடுத்த சுமந்திரன் கிளிநொச்சிக்கு அழைத்து சென்று இந்த மக்களுடன் பேச வைக்க ஏன் விரும்பவில்லை?
வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலைகளை நிறுவியே தீருவேன் என்று அடம்பிடிக்கும் யாழ் இந்திய தூதுவர்கூட 100 நாட்களாக அகிம்சை போராட்டம் நடத்தும் இந்த மக்களை திரும்பிக் கூட பார்க்கவில்லையே?
இலங்கை இந்திய அரசுகள் இந்த மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் இல்லை.
ஆனால் இந்த மக்களிடம் வாக்கு பெற்று பதவியை அனுபவிக்கும் தமிழ் தலைவர்கள்கூட கவனிக்காமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
இனவாதக்கட்சி என்று இவர்களால் கூறப்பட்ட ஜே.வி.பி கூட இந்த உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளது.
முன்னிலை சோசலிசக்கட்சி இந்த பிரச்சனைக்காக பல தடவை போராட்டம்கூட நடத்தியுள்ளது.
ஆனால் எமது தலைவர்களால் போராட்டம் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. இந்த மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் வார்த்தைகூட சொல்ல தோன்றவில்லை.
இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் பதவியை துறப்பேன் என்று ஒரு பேச்சுக்குகூட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சொல்வதற்கு தயாரில்லை.
நாட்டில் உள்ள தலைவர்கள்தான் இப்படியென்றால் அதைவிட மோசமாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகளும் தலைவர்களும் இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டிற்காக வீதிகளில் இறங்கியவர்கள் தமது இந்த உறவுகள் 100 நாட்களாக போராடி வருகையில் மௌனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த உறவுகள் செய்த தவறு என்ன?
தமிழ் இனத்தில் பிறந்தது இவர்கள் தவறா? அல்லது
தங்கள் உறவுகளைத் தேடி அவர்கள் அகிம்சை வழியில் 100 நாட்கள் போராடியது தவறா?
இன்னும் எத்தனை நாட்கள் இவர்கள் போராட வேண்டும் பதில் பெறுவதற்கு?

No comments:

Post a Comment