Tuesday, May 30, 2017

போராளிகளை படுகொலை செய்வதன் மூலம் போராட்டத்தை ஒருபோதும் அடக்கிவிட முடியாது!

•போராளிகளை படுகொலை செய்வதன் மூலம்
போராட்டத்தை ஒருபோதும் அடக்கிவிட முடியாது!
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் துருக்கியில் இளம் போராளி சிலா அபலாய் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டபோது உலகம் எப்படி கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததோ அதேபோன்றுதான் இந்தியாவில் காஸ்மீரில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படும்போதும் சதீஸ்கரில் பழங்குடி மக்கள் கொல்லப்படும்போதும் துருக்கியில் கொல்லப்படும்போதும் வேடிக்கை பார்க்கின்றது.
ஆயிரக் கணக்கில் மக்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என எப்படி இலங்கை அரசு நினைத்ததோ அதேபோன்றுதான் இந்திய அரசும் துருக்கிய அரசும் படுகொலை மூலம் மக்கள் போராட்டங்களை அடக்கிவிடமுடியும் என நினைக்கின்றன.
ஆனால் படுகொலைகள் மூலம் மக்கள் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என்பதை எப்படி இலங்கையில் தமிழ் மக்கள் நிரூபித்து வருகிறார்களோ அதேபோன்று இந்தியாவில் மட்டுமல்ல துருக்கியிலும் மக்கள் நிச்சயம் நிரூபிப்பார்கள்.
இலங்கை அரசாக இருந்தாலும் சரி அல்லது இந்திய மற்றும் துருக்கிய அரசுகளாக இருந்தாலும் சரி படுகொலைகள் மூலம் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் அடக்கிவிட முடியாது.
ஏனெனில் மக்களுக்காக போராடும் போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். எனவே ஆயிரம் ஆயிரம் போராளிகள் முளைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில் தாம் அழியும்போது தமக்காக யாரும் குரல் கொடுக்கவேயில்லையே என கூறும் தமிழர் சிலர் இந்தியாவில் , துருக்கியில் மக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்படும்பொது குரல் கொடுப்பதில்லை.
அடக்கு முறைக்கு எதிராக போராடும் ஒரு இனம் இன்னொரு போராடும் இனத்துடனே ஜக்கியப்பட முடியும். மாறாக போராடும் தமிழ் இனம் போராட்டத்தை அடக்கும் இந்திய அரசுடனோ அல்லது அமெரிக்க அரசுடனோ ஒருபோதும் ஜக்கியப்பட முடியாது.
துருக்கியில் பாசிச அரசால் படுகொலை செய்யப்ட்ட புரட்சிகர இளைஞர் அமைப்பைச் சேர்ந்த 18 வயதான பெண் போராளி சிலா அபலாயை நினைவு கூர்வோம். அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம்.
துருக்கிய அரசின் படுகொலைகளை கண்டிப்போம். துருக்கிய அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எமது ஆதரவினை தெரிவிப்போம்.

No comments:

Post a Comment