Sunday, July 29, 2018

•இந்த அவலத்திற்கு யார் பதில் தருவார்?

•இந்த அவலத்திற்கு யார் பதில் தருவார்?
ஈழத் தமிழன் அகதியாக சென்ற எல்லா நாடுகளும் அவனுக்கு வாழ்வு தருகிறது. ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு மட்டும் ஏன் அவனை ஒதுக்கி வைத்திருக்கிறது?
ஜெர்மன் நாட்டில் தமிழ் இனம் இல்லை. ஜெர்மன் நாடு தமிழ் இனத்தின் தொப்புள் கொடி உறவு நாடும் இல்லை.
இருந்தும் அகதியாக வந்த ஈழத் தமிழர்களை அரவணத்து வாழ்வு கொடுக்கிறது.
குடியுரிமை, கல்வியுரிமை வேலை வாய்ப்பு உரிமை என அனைத்து உரிமைகளையும் கொடுக்கிறது.
துளசி தர்மலிங்கம் என்பவர் ஒரு ஈழத் தமிழர். ஜெர்மனிக்கு அகதியாக சென்றவர்.
இன்று அவர் ஜெர்மனி சார்பாக உலக குத்தச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்று வருகிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் அகதியாக சென்ற ஈழத் தமிழர்கள் உயர் கல்வி கற்க முடியவில்லை. வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. போட்டிகளில்கூட கலந்துகொள்ள முடியவில்லை.
அண்மையில் சன் டிவியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டியில் பெண் குழந்தை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பாக பாடியுள்ளார்.
ஆனால் அப் பெண் ஒரு ஈழ அகதிக் குழந்தை என்று தெரிந்ததும் உடனடியாக போட்டியில் இருந்து விலத்தப்பட்டுள்ளார்.
இதை தெரிந்துகொண்ட நடிகர் இமான் அண்ணாச்சி அக் குழந்தைக்காக நியாயம் கேட்டிருக்கிறார்.
இருந்தும் சன் டிவி நிர்வாகம் தங்களுக்கு பிரச்சனை வரும் எனக்கூறி அக் குழந்தையை இணைத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
இது ஏதோ பிரபல்யம் இல்லாத அகதிக் குழந்தைக்கு அதுவும் ஒரு டிவியில் மட்டும் நடந்துவிட்டதாக எண்ணாதீர்கள்.
மிகவும் பிரபலயம் பெற்ற பாலு மகேந்திராவுக்கும்கூட இதுதான் நடந்தது. அவர் ஒரு ஈழத் தமிழர். இந்தியாவில் படித்தார். இந்தியாவில் தொழில் செய்தார். இந்தியாவில் திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்தார்.
ஆனாலும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. அவருக்கு வெளிநாடு சென்று ஒரு படமாவது தன் கமராவினால் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் அவரது ஆசை அவரது மரணம் வரை நிறைவேறவில்லை. ஏனெனில் வெளிநாடு செல்வதற்கு தேவையான பாஸ்போட்டை இந்திய அரசு அவருக்கு வழங்கவேயில்லை.
புகழ்பெற்ற பாலுமகேந்திராவுக்கே இந்த நிலை என்றால் சாதாரண ஈழ அகதிகளின் நிலை எப்படியிருக்கும்?
இந்த அவலத்திற்கு யார் பதில் தருவார்கள்?

No comments:

Post a Comment