Monday, October 31, 2016

•மலையக தமிழரின் தொடரும் துயர வரலாறு!

•மலையக தமிழரின் தொடரும் துயர வரலாறு!
தாம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றார்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்தபின்பு 730 ரூபா சம்பள உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்கிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக 10,000 ரூபா முன் பணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்கள்.
ஆனால் உறுதியளித்தமைக்கு மாறாக இப்போது 6500 ரூபா மட்டுமே வழங்குகின்றார்கள்.
தொடர்ந்து மலையக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். ஆனால் அவர்களின் தலைவர்களோ வழக்கம்பொல் இந்த துரோகங்களுக்கு துணை போகின்றார்கள்.
ஒருத்தனிடம் இருந்து ஒரு லட்சம் ரூபா திருடினால் அவனை திருடன் என்போம்.
அவனே ஒரு லட்சம் பேரிடம் இருந்து ஒவ்வொரு ரூபாவாக திருடினால் அவனை தலைவன் என்கிறோம்.
ஆம். இதுதான் மலையகத்தில் நடைபெறுகிறது. மலையக தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணம் என்னும் பெயரில் தொண்டமான் பரம்பரை திருடுகின்றது.
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை மலையக மக்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் குரல் கொடுத்தார்கள்.
அதுமட்டுமன்றி லண்டன் வாழ் தமிழர்களும் மலையக மக்களுக்கு ஆதரவாக இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி குரல் கொடுத்துள்ளனர்.
ஆனால் மலையக மக்களின் தலைவர்கள் வழக்கம்போல் தமது மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
இலங்கையில் அதிக வருமானத்தை ஈட்டித் தருவது தேயிலை ஏற்றுமதியே. ஆனால் அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கேட்டால் வியாபாரம் நட்டத்தில் இயங்குவதாக முதலாளிகளும் அரசும் கூறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை மறுக்கும் முதலாளிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த வருடம் மட்டும் கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான 700 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர்.
•மலையகத்தில் பெருந்தோட்டங்களில் 9.5 லட்சம் தமிழ் மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் வாழுகிறார்கள்.
•14 310 தற்காலிக வீடுகள் இருக்கின்றன. 83 960 பேர் வீடுகள் எதும் இல்லாது வாழ்கிறார்கள் (உறவினர்கள் வீடுகளில்).
•இலங்கையில் 40% சிறுவர் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தமிழ் சிறுவர்களே.
•பெருந்தோட்ட மாணவர்களில் 29% மாத்திரமே க.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைகின்றார்கள். எவ்வித பயிற்சி, கல்வி தகைமை இல்லாமல் ஆண்டுக்கு சுமார் 6000 மாணவர்கள் தொழிற்சந்தைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.
•பெருந்தோட்டங்களில் ஒரு குடும்பம் 12 Kg கோதுமை மாவை உட்கொள்கின்றது. குறிப்பாக தேங்காய் இல்லாத ரொட்டியும் வெங்காய சம்பலையுமே அவர்கள் உட்கொள்கின்றார்கள்
•பெருந்தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளில் 36% குறைந்த எடையுடனே பிறக்கின்றன. குறிப்பிட்ட வயதில் தேவையான உயரமோ எடையோ இல்லாமல் 25% வாழ்கின்றனர். 5 வயதுக்கு குறைவானோரில் 25% மானோருக்கு மந்தபோசனம் உள்ளது.
•தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட ஒரு தமிழ் பாடசாலைக்கூட இல்லை.
•நாடு முழுவதும் 28900 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குகின்றபோதிலும் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்தோர் 120-150 பேர் வரை மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர்.
•வருடாந்தம் 200 மில்லியன் ரூபா தொண்டமான் பவுண்டேசனுக்கு ஒதுக்கப்படுகின்றது. கடந்த 9 வருடங்களில் ஒதுக்கப்பட் 1800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? இங்கே தொழிலாளி 450 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது, தொண்டமானால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்மணிக்கு 3.5 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது.
பாராளுமன்டறத்தில் இத்தனை குறைகளையும் எடுத்துக்கூறி மலையக மக்களுக்காக குரல் கொடுத்தவர் அந்த மக்களின் தலைவரான தொண்டமான் அல்ல. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தர் அய்யாவோ அல்ல.
மாறாக இவர்களால் இனவாதக்கட்சி என்று கூறப்படும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார அவர்களே மலையக மக்களுக்காக இவ்வாறு குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் தலைவர்களை விட இவர்கள் குறிப்பிடும் இனவாதத் தலைவர்கள் பரவாயில்லை போல் தெரிகிறது.
குறிப்பு- எதிர்வரும் 5.11.16 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் மலையகம் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment