Thursday, October 20, 2016

•“மாவோயிஸட்” என்றால் பயங்கரவாதி என்று கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தி மாறுமா?

•“மாவோயிஸட்” என்றால் பயங்கரவாதி என்று
கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தி மாறுமா?
நக்சலைட்டுகள் தேசவிரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று முன்னர் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
தற்போது, மாவோயிஸ்ட் (நக்சலைட்டு) என்பதற்காக ஒருவரை கைது செய்ய முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை அம்மாநில சிறப்பு போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குப்பதிந்தனர்.
தான் கைது செய்யப்பட்டது அரசியலமைப்பு சட்டம் 21-ம் பிரிவின் படி சட்டவிரோதம், மனித உரிமை மீறல் என கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமது முஷ்டாக் அவர்கள் “மாவோயிஸட்டாக இருப்பது குற்றமல்ல ஒருவர் மாவோயிஸ்ட் என்ற காரணத்தினால் அவரை போலீசார் கைது செய்யமுடியாது “ என்று கூறியிருக்கிறார்.
நீதிமன்றங்கள் எத்தனை முறை இவ்வாறு கருத்து கூறினாலும் இந்தியா முழுவதும் அப்பாவிகளை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும் அவர்களை விசாரணை எதுவுமின்றி போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்வதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
அதேபோலத்தான் முஸ்லிம்கள் என்றால் அவர்களை அல்கைதா பயங்கரவாதி என்று கூறி சிறையில் அடைக்கப்படுவதும் ஈழஅகதிகளை விடுதலைப்புலி என்று கூறி சிறப்புமுகாம்களில் அடைப்பதும் தொடர்கிறது.
பெரும்பாலான முதலாளித்துவ பத்திரிகைகளும் ஊடகங்களும் பொலிசார் சொல்வதை அப்படியே பிரசுரிப்பதும், மாவோயிஸ்ட் , விடுதலைப்புலி, அல்கைதா என்று முத்திரை குத்திவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் தொடர்கிறது.
ஒரு நபரை பயங்கரவாதியாக முத்திரை குத்திவிட்டால் அவருக்கு விசாரணை தேவையில்லை, அவருக்கு அடிப்படை மனிதவுரிமை தேவையில்லை, அவருக்கு பொலிசாரே தண்டனை வழங்கலாம் என்றதொரு பொதுப்புத்தி காணப்படுகிறது.
ஒருபுறத்தில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று அரசியல்அமைப்பு சட்டத்தில் எழுதி வைத்துவிட்டு மறுபுறத்தில் அப்பாவிகளை கைது செய்து சித்திரவதை செய்வதும், என்கவுண்டர் கொலை செய்வதும் நிகழ்கிறது.
இந்த அவலம் என்றுதான் நீங்கும்?

No comments:

Post a Comment