Thursday, October 20, 2016

•தொடரும் இளவரசர்களின் அட்டகாசம்!

•தொடரும் இளவரசர்களின் அட்டகாசம்!
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது மூன்று புதல்வர்கள் இளவரசர்களாக வலம் வந்தனர்.
அந்த மூன்று இளவரசர்களும் செய்த அட்டகாசங்கள் கணக்கில் அடங்காதவை. ஆட்சிமாறியும்கூட இன்னும்கூட அவர்கள் அதற்காக தண்டிக்கப்படவில்லை.
தாம் விரும்பிய பெண்களை பலவந்தமாக அடைந்தார்கள். அதற்கு தடையாக இருந்த முஸ்லிம் ரக்பி வீரர் ஒருவரை கொலைகூட செய்தார்கள்.
நாமல் ராஜபக்சவுடன் கூத்தடிப்பதற்காக விமானப் பணிப்பெண் ஒருவருக்கு வேலை இல்லாமலே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
நாமல் ராஜபச்ச குதிரை சவாரி செய்வதற்காக இங்கிலாந்து மகாராணியின் குதிரை கொள்வனவு செய்யப்பட்டது.
நுவரேலியாவில் வைக்கப்பட்டிருந்த குதிரையில் சவாரி செய்வதற்காக தினமும் காலை கொழும்பில் இருந்து கெலிகொப்டரில் அவர் சென்று வந்தார்.
கொலை, லஞ்சம், ஊழல், பண மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மகிந்த ராஜபக்சவின் இளவரசர்கள் மீது உள்ளது.
அதேபோல் புதிய ஜனாதிபதி மைத்திரியின் புதல்வரும் இளவரசராக வலம் வருகிறார். மைத்திரி பதவி ஏற்றது முதல் இவரும் அடாவடிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நல்லாட்சி தருவதாக கூறும் ஜனாதிபதி மைத்திரி தனது மகனைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அவர் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க முயல்கிறார்.
ஜனாதிபதி மைத்திரி தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகனைக் காப்பாற்ற முயல்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஜனாபதி மைத்திரியின் இளவரசர் தனது கூட்டாளிகளுடன் சென்று இரவு கேளிக்கை விடுதியில் வழக்கம்போல் குடிபோதையில் கலாட்டா செய்துள்ளார்.
அந்த இரவு கேளிக்கை விடுதியை அடித்து நொருக்கியுள்ளார். அங்கு பணி செய்த ஊழியர்களையும் தாக்கியுள்ளார்.
அவர்மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்வதற்கு மாறாக அவர் அப்போது அங்கு இருக்கவில்லை என அவ் ஊழியர்கள் மூலமே கூறவைக்கின்றனர்.
இதையேதான் கடந்த ஆட்சிக்காலத்தில் மகிந்தவின் இளவரசர்கள் செய்தார்கள். இப்போது மைத்திரியின் இளவரசர் செய்கிறார்.
இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். ஆனால் மன்னர் ஆட்சிக் காலம்போல் இளவரசர்களின் அட்டகாசம் தொடருகின்றது.
இதற்கு ஒரு முடிவு இல்லையா?

No comments:

Post a Comment