Tuesday, June 27, 2023

தியாகி சிவகுமாரன் 49வது நினைவு தினம்.

•தியாகி சிவகுமாரன் 49வது நினைவு தினம். (05.06.1974) போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது. சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர். சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார். பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் வள்ளம் ஓட்டிகள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது. அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும். சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர். பதவி பெற்றபின் சிவகுமாரின் பெயரை மறந்துவிட்டனர். ஆனால் வரலாறு அவர் பெயரை பொறித்து நிற்கிறது. தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

No comments:

Post a Comment