Friday, June 30, 2023

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததுபோல்

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததுபோல் தையிட்டியில் உள்ள புத்த விகாரையை உடைப்போம் என்று ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் அவர்கள் பேசியுள்ளார். இவ்வாறு பேசிய மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒரு பௌத்த தலைவர்கூட இதற்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்கு தெரியும் இவர் விகாரையை உடைக்கப்போவதில்லை என்று. விகாரைக்கு ஒரு கல்லுக்கூட எறிய மாட்டார் என்றும் அவர்களுக்கு தெரியும். கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோது அதனை உடைப்போம் என்று மன்னார் ஆயர் அறிக்கைவிட வில்லை. மாறாக பேச வேண்டியவர்களுடன் பேசி கமுக்கமாக புத்தர் சிலையை அகற்ற வைத்துவிட்டார். அதுபோல் தையிட்டி விகாரை அகற்ற வேண்டும் என்று உண்மையில் சச்சிதானந்தம் அவர்கள் விரும்பினால் இந்திய அரசிடம் கூறி அகற்ற முடியும். ஏனெனில் இன்று பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சிங்கள அரசுக்கு மிகப் பெரும் உதவி வழங்கிவருவது இந்திய அரசே. எனவே விகாரை அகற்றாவிட்டால் உதவிகள் யாவும் நிறுத்தப்படும் என இந்திய அரசு ஒரு மிரட்டல் விட்டால் போதும், அடுத்த நிமிடம் சிங்கள அரசு ஆடிப் போய்விடும். ஒருவேளை இந்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து இனி இந்திய அரசை ஆதரிப்பதை சச்சிதானந்தம் அவர்கள் நிறுத்த வேண்டும். அதன்பின்பு தையிட்டி விகாரையை உடைக்க சச்சிதானந்தம் அவர்கள் முன்வந்தால் அதற்குரிய அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ள நாம் தயார்.

No comments:

Post a Comment