Tuesday, June 27, 2023

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதால் ஏழு தமிழரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக அரசு அதில் நாலு பேர் ஈழத் தமிழர் என்பதால் சிறப்புமுகாமில் அடைத்துள்ளது. ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டிருப்பது எப்படி விடுதலையாகும்? அதுவும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் ஆகிய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குகூட அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சக ஈழத் தமிழ் அகதிகளுடன் சேர்த்து வைக்காமல் தனித்து ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர்களை பிரித்து தனித்து அடைத்து வைப்பதற்காக சிறப்புமுகாமிற்குள் ஒரு அறையை புதிதாக கட்டிக்கொண்டிருக்கின்றது தமிழக அரசு. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரும்பினால் அவர்களின் சொந்த செலவில் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சாந்தன் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்தும் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவரை அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாந்தனின் தாயார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என விரும்புகிறார். ஆனால் சிங்கள மக்களுக்கும் சேர்த்து உணவு அனுப்பும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட சுமந்திரன், இந்த தாயாருக்கு இரங்கி சாந்தனை அனுப்பி வைக்கும்படி கேட்கவில்லை. இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என அறிக்கை விடும் காசி அனந்தன் ஐயாவும் இந்த நால்வர் இந்துதானே அவர்களை விடுதலை செய்யும்படி குரல் கொடுக்க வில்லை. ஒருபுறம் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழரை அடைத்து வைக்கிறார் அவர் மகன் ஸ்டாலின். மறுபுறம் ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் ஈழத் தமிழருக்கு செய்த நன்மைகள் என்றுகூறி பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment