Tuesday, June 27, 2023

எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட

எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். எதிர்வரும் 18ம் திகதி மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர். அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இந்நிலையில் ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சிக்கு நிதி சேகரிக்க வேண்டி கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு தான் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை அவர் எழுதினார். இன்று ரஸ்சிய பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை. அப் புகழ் பெற்ற இலக்கியவாதியான கார்க்கி கூறுகிறார் “ போராட துணிந்த ஒருவனுக்கு உதவுவதாகவே இலக்கியவாதியின் எழுத்து இருக்க வேண்டும்” ஆனால் இப்போது சில இலக்கியவாதிகளின் எழுத்துகள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உதவவில்லை. மாறாக போராடியவர்களை இகழ்வு செய்கிறது. அதுவும் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் சிந்திய குருதியை ஒண்டிப்புலி சர்பத் என்று ஒருவர் எழுதுகிறார். அவருக்கு சில ஈழத் தமிழ் இலக்கியவாதிகள் அழைத்து இயல் விருது அளித்து கௌரவிக்கின்றனர். இவர்கள் இலக்கியவாதிகள் அல்லர். இவர்கள் இலக்கிய வியாதிகள்.

No comments:

Post a Comment