Wednesday, August 30, 2023

இன்று சதுரங்கம் விளையாட விரும்புவோர்

இன்று சதுரங்கம் விளையாட விரும்புவோர் கம்யுட்டரில் விளையாடலாம். விரும்பினால் உலப் புகழ் பெற்ற சாம்பியன்களுடன்கூட ஆன்லைனில் விளையாடலாம். ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த வசதிகள் எமக்கு இருக்கவில்லை. எனது கரவெட்டி ஊரில் அரசடிச்சந்தி என்னும் இடத்தில் பலர் சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு அருகில் இருவர் சதுரங்கம் விளையாடுவார்கள். எனக்கு நன்றாக சீட்டு விளையாட தெரியும். சதுரங்கம் தெரியாது. ஆனாலும் நான் அந்த இருவர் விளையாடும் சதுரங்கத்தையே விரும்பி பார்ப்பேன். எனக்கு சதுரங்கம் விளையாட பழக வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. அந்த ஆசை மதுரை சிறையில் நிறைவேறும் என்று நான் நினைத்திருக்கவில்லை. மதுரை சிறையில் அப்போது மணி என்று ஒரு கைதி இருந்தார். அவரை எல்லோரும் புரட்சி மணி என்றே அழைப்பார்கள். அவர் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். கட்சிக்காக கொலை செய்து அதனால் ஆயுள் தண்டனை பெற்றிருந்தார். அவர்தான் எனக்கு சதுரங்கம் விளையாட பழக்கினார். மிக விரைவாக கற்றுக்கொண்டேன். இறுதியில் அவரையே தோற்கடித்தேன். தன்னை யாரும் சிறையில் தோற்கடித்ததில்லை என்றும் நான் தோற்கடித்தற்காக தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. பின்னர் மதுரை சிறையில் இருந்து என்னை வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் கொண்டு சென்று அடைத்தார்கள். அங்கிருந்த புலி இயக்க போராளிகள் பலர் சதுரங்கம் விளையாடினார்கள். அதில் ஓட்டி குமார் என்ற போராளி நன்கு விளையாடக்கூடியவர். அவரும் நானும் பல தடவைகள் விளையாடியிருக்கிறோம். என்னுடைய எட்டு வருட சிறைவாழ்வு பல மறக்க முடியாத அனுபவங்களை தந்திருக்கிறது. அதில் இந்த சதுரங்க விளையாட்டும் ஒன்று என்று கூறலாம்.

No comments:

Post a Comment