Wednesday, January 31, 2018

•தவளையும் தன் வாயால் கெடும்

•தவளையும் தன் வாயால் கெடும்
சுமந்திரனுக்கும் அவர் வாயாலேதான் அழிவு!!
மாரித் தவளை கத்தி கத்தி செத்து விடுவது போன்று சுமந்திரனும் தன் வாயாலே தனக்குரிய அழிவைத் தேடி வருகின்றார்.
சுமந்திரனின் கனடா பேச்சைக் கேட்ட லண்டன் தமிழரசுக்கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார் “ நல்லவேளை சுமந்திரன் லண்டனில் பேசவில்லை “ என்று.
ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 2+ 2 =5 என்று ஏன் எழுதினாய் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் இன்னொரு மாணவனும் அப்படித்தானே எழுதியிருக்கிறான் என்று பதில் கூறினான்.
நீ ஏன் தவறான விடை எழுதினாய் என்பதற்கு பதில் சொல்லு. மற்ற மாணவனும் எழுதினான் என்பது பதில் அல்ல என்று ஆசிரியர் அவனுக்கு கூறினார்.
இந்த சம்பவத்தை பார்க்கின்ற யாரும் அந்த மாணவன் உரிய பதில் கூறவில்லை என்பதை ஒத்துக்கொள்வார்கள்.
ஆனால் கனடாவில் சில பெரிசுகள் அந்த மாணவன் கெட்டிக்காரன் என்றும் அற்புதமான பதிலை சொல்லிவிட்டான் என்றும் கூறுகின்றனர்.
ஆம். கனடாவில் சுமந்திரன் பேசிய பேச்சும் இந்த மாணவன் கூறிய பதில் போன்றே இருக்கிறது.
தமிழீழத்தை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் கூறாமல் பிரபாகரன் கைவிட்டபோது ஏன் கேட்கவில்லை என்று திருப்பி கேட்கிறார்.
சமஸ்டியை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டால் தந்தை செல்வா சமஸ்டியை கேட்டபோது அதை எதிர்த்தவர் ஆனந்தசங்கரி என்கிறார்.
நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று கேட்டால் கஜேந்திரகுமாரும் இதைத்தானே செய்கிறார் என்பதாகNவு அவர் பதில் இருக்கிறது.
இவ்வாறு சுமந்திரன் பதில் சொல்வதையே சில பெரிசுகள் ஆகா அற்புதம் என்று புகழ் பாடுகின்றனர்.
இதுகூடப் பரவாயில்லை. இதைவிடக் கேவலம் என்னவென்றால், சுமந்திரன் சம்பந்தர் அய்யாவை சாத்திரியார் என்று நக்கல் அடிப்பதுகூடத் தெரியாமல் இந்த பெரிசுகள் கைதட்டியிருப்பது.
தீர்வு எப்போது வரும் என்று யாராவது தன்னைக் கேட்டால் அதை சாத்திரிமாரிடம் கேளுங்கள் என்று தான் சொல்லி வருவதாக சுமந்திரன் கிண்டலாக கூறினார்.
ஏமக்கு தெரிந்தவரையில் தீர்வு ஒரு வருடத்தில் வரும் , இருவாரத்தில் நல்ல செய்தி வரும், அடுத்த தீபாளிக்குள் வரும் என்று கூறிவருபவர் சம்பந்தர் அய்யா மட்டுமே.
எனவே சுமந்திரன் கூற்றுப்படி சாத்திரி சம்பந்தர் அய்யாவை கைதட்டி கிண்டல் பண்ணியிருப்பவர்கள் அவர் கட்சியைச் சேர்ந்த பெரிசுகளே.
சுமந்திரன் இதுவரை என்ன பேசிவந்தாரோ அதையேதான் கனடாவிலும் பேசியுள்ளார்.
இதுவரை புலிகள் கொலைகாரர் என்றார். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பும் விசாரிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் வெளியேற்றம் புலிகளின் இனச் சுத்திகரிப்பு என்றார்.
இப்போது, பிரபாகரன் தமிழீழத்தை கைவிட்டபோது ஏன் யாரும் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதேவேளை, நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறார். சர்வதேச விசாரணை தேவையில்லை என்கிறார். இலங்கை அரசுக்கு அவகாசம் பெற்றுக் கொடுக்கிறார்.
பௌத்தத்திற்கு முன்னுரிமைக்கு சம்மதம் தெரிவிக்கின்றார். சிங்கக்கொடி ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
மக்கள் தெருவில் நின்று போராடுகின்றனர். ஆனால் நடப்பது நல்லாட்சி என்று அவர் உலகம் முழுவதும் சென்று கூறுகிறார்.
இவ்வாறு அவருடைய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பேச்சும் தமிழ் இனத்திற்கு எதிராகவே இருக்கின்றது.
ஆனால் சில பெரிசுகள் அவரை “ஆகா ஓகோ அற்புதமான தலைவர்” என்று புகழ்கின்றன.

No comments:

Post a Comment