Monday, April 23, 2018

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது

 “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா?
மதிப்பு மிக்க தலைவர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வந்து போராடி தமிழீழத்தை பெற்றுத் தருவார் என்றும் கூறிவருகிறார்கள்.
பிரபாகரன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நெடுமாறன் கடந்த வருடம் கூறியிருந்தார். அதுமட்டுமன்றி அண்மையில் தன்னை சந்தித்த ஒரு ஈழத் தமிழரிடம் பிரபாகரனின் நீரிழிவு நோய்கூட தற்போது குணமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரபாகரன் இருக்கிறார் என்று தொடர்ந்து கூறிவரும் இத் தலைவர்கள் அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? என்பன குறித்து எதுவும் கூறுவதில்லை. இதனால் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதால் யாருக்கு நன்மையளிக்கிறது என்று கேட்க வேண்டியுள்ளது.
இப்பதிவு கடந்த 2.4.2014 செய்த பதிவாகும். காலத்தின் தேவைகருதி மீள் பதிவு செய்கிறோம்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது
(1) தமிழ் மக்களை பிரபாகரன் வருகைக்காக காத்து இருக்க வைக்கின்றது.
(2) தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தலைமை உருவாவதைத் தடுக்கிறது.
(3) தமிழ் மக்கள் இன்னொரு போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தடுக்கிறது.
(4) கோத்தபாயா “புலிகள் இருக்கிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய உதவுகிறது.
(5) மகிந்த ராஜபக்ச இதனைக் காட்டி தேர்தலில் தொடர்ந்து வெல்ல வழி செய்கிறது.
(6) ஜ.நா வில் புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள் என்றும் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த இடம் அளிக்கிறது.
(7) தமிழ் மக்கள் பல்லாயிரம் பேரைக் கொல்ல கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பி சென்றுவிட்டார் என பிரபாகரன் மீது சிலர் விமர்சனம் செய்ய இடம் கொடுக்கிறது.
(8) தனது மகன், மகள், மனைவி எல்லாரும் இறந்துவிட தான் மட்டும் தப்பிச் செல்லும் அளவிற்கு பிரபாகரன் சுயநலமானவரா? என சிலர் கேட்டு கொச்சைப்படுத்த வைக்கின்றது.
(9) இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய உதவுகிறது.
(10) தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமை தொடர்ந்து வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் உதவுகிறது.
(11) தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக கோபம் கொண்டுவிடாமல் தடுக்கிறது.
(12) பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது இலங்கை இந்திய அரசின் நோக்கங்களுக்கே அதிகம் துணை செய்கிது.
(13) மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. நட்டமே அதிகம்.
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற வியட்நாம் தந்தை கோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டபோது “எந்த உண்மைகளையும் மக்களிடம் மறைக்காதீர்கள். கசப்பான உண்மையாக இருந்தாலும் மக்களிடம் கூறுங்கள். அவர்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.
மக்களை நம்புவோம்.
மக்களுக்கு உண்மைகளை கூறுவோம்.
மக்கள் வெற்றியை பெற்று தருவார்கள் .

No comments:

Post a Comment