Friday, August 30, 2019

நண்பர் தின வாழ்த்துகள்!

•நண்பர் தின வாழ்த்துகள்!
பொட்டம்மான் ஒருமுறை தளபதி நியூட்டனை அழைத்து என்னைப் பற்றி கேட்டபோது “ பாலன் எனது ஊரைச் சேர்ந்தவர். என்னுடன் படித்தவர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்” என்று நியூட்டன் கூறியிருக்கிறார்.
உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். எனது பலவீனமும் நண்பர்கள்தான்.
தமிழகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
நான் அவருக்கு கூறினேன் “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்தது போல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று.
பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை. ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் நண்பர்களின் உதவியாகும்.
என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள். அவர்களில் பலரை நான் இன்னும் பொது வெளியில் நினைவு கூர்ந்ததில்லை.
ஆனால் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே.
நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும். நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும். ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் பெற்றுவிட முடியாது.
இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள். ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள்.
அதேபோல் நேற்று பல ஊர் நண்பர்கள் முகநூலில் ஒருவர் என்னைப் பற்றி அநாகரிகமாக எழுதியது குறித்து பேசினார்கள்.
அப்போது ஒரு நண்பர் கூறினார் “ அண்ணை நீங்கள் வருத்தப்படாதீர்கள். உங்களுடன் ஒருநாளாவது அவன் நட்பாய் பழகியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டான்” என்று.
உண்மைதான். நட்பின் அருமையை புரியவைக்க இந்த ஒரு வரியே போதும்
பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள்.
அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும்.
என் இனிய நண்பர்களுக்கு “வாழ்த்துகள்”

No comments:

Post a Comment