Friday, August 30, 2019

•மகிந்த ராஜபக்சாவை ஆதரித்தால் தீர்வு கிடைக்குமா?

•மகிந்த ராஜபக்சாவை ஆதரித்தால் தீர்வு கிடைக்குமா?
இரு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இருந்து ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார்.
தான் 20 வருடங்கள் புலிகளில் இருந்ததாகவும் தற்போது குடும்பதுடன் பெரும் சிரமப்படுவதாக கூறினார்.
அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச அணியை தான் ஆதரிக்கப் போவதாகவும் அது குறித்து என் கருத்து என்னவென்று கேட்டார்.
ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று நான் கேட்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களை ஏமாற்றி விட்டது என்றும் அதனால் வேறு வழியின்றி மகிந்தவை ஆதரிக்க முடிவெடுத்ததாக கூறினார்.
அதற்கு நான் “ தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்பது உண்மைதான். ஆனால் மகிந்த ராஜபக்சா மீது உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?” என்று கேட்டேன்.
“மகிந்த ராஜபக்சா வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமல்ல அதை கையொப்பம் இட்டு எழுத்தில் தருவதாகவும் கூறியுள்ளார். எனவே நாம் நம்புகிறோம்” என்றார்.
இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தையே மீறி வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்தவர் மகிந்த ராஜபக்சா.
அதுமட்டுமல்ல புலிகளை அழித்த பின்பு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவேன் என சர்வதேசத்திற்கு வாக்குறதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றியவர் இந்த மகிந்த ராஜபக்சா.
“அப்படிப்பட்ட மகிந்த ராஜபக்சா உங்களை ஏமாற்ற மாட்டார் என்று எப்படி நம்புகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்.
இதற்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. மௌனமாக இருந்தார். பின்னர் “அப்படி என்றால் நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?” என்று என்னிடமே கேட்டார்.
அதற்கு நான் “ நீங்கள் யாரை ஆதரித்தாலும் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை” என்றேன்.
“ஏன்?”
“ஏனெனில் தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்கள் தீர்வு எதையும் பெற்று விடமுடியாது”.
“அப்படியென்றால் எந்தப் பாதையில் பெற முடியும்?”
“ஆயுதம் ஏந்திய போராட்டப் பாதையில் மட்டுமே பெற முடியும். தமிழ் இன விடுதலையை சென்றடைய அதைவிட வேறு எந்த பாதையும் இல்லை”.
“ஆயுதப் பாதையில் எதுவும் கிடைக்கவில்லையே?”
“1948 ம் ஆண்டில் இருந்து தேர்தல் பாதையில் பயணிக்கிறோம். தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மகாணசபை கிடைத்தது. அதற்கு காரணம் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதே. எனவே தமிழ் மக்களுக்கு இனி எதுவும் கிடைப்பதாயின் அது ஆயுதப் போராட்டப் பாதையிலே பெற முடியும்.”

No comments:

Post a Comment