Sunday, July 30, 2023

காந்தியம் என்ற அமைப்பை உருவாக்கி

காந்தியம் என்ற அமைப்பை உருவாக்கி டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்றிய இன்னொருவர் டேவிட் ஐயா. டேவிட் ஐயா அவர்களையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி வெலிக்கடை சிறையில் அடைத்தது சிங்கள அரசு. வெலிக்கடை சிறைப்படுகொலையில் உயிர் தப்பிய டேவிட் ஐயா அவர்கள் இந்தியா சென்று தங்கினார். இந்தியாவில் தமிழக காவல்துறையும் அவர் பெயரை பயங்கரவாதி லிஸ்ட்டில் வைத்திருந்தது. 91வது வயதிலும் அவர் கியூ பிரிவு பொலிசாரின் கண்காணிப்பிலேயே இருந்தார். காந்தியவாதியான டேவிட் ஐயா காந்திதேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவிலும் பயங்கரவாதியாக வைத்திருந்ததை என்னவென்று அழைப்பது? தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா அவர்கள் 11.10.2015 யன்று தனது 91வது வயதில் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார். அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார். அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர். அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம். எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அவர் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்தார். அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.

No comments:

Post a Comment