Tuesday, July 30, 2019

நித்தியானந்தா முட்டாளாக இருக்க அவருக்கு உரிமை உண்டு.

•நித்தியானந்தா முட்டாளாக இருக்க அவருக்கு உரிமை உண்டு.
ஆனால் தனது முட்டாள்தனத்தை பரப்ப அவருக்கு உரிமை இல்லை.
நித்தியானந்தாவின் சீடர்கள் அவரை சாமி என்கிறார்கள். ஆனால் அவர் பற்றிய உண்மை தெரிந்தவர்கள் அவரை ஒரு ஆசாமி என்கிறார்கள்.
சரி, அவர் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் தனது முட்டாள்தனத்தை பரப்ப முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நவகிரகங்களின் உச்சம் பெற்றவர் அல்லது உடம்பெல்லாம் மச்சம் உள்ளவர் என்பார்களே அதற்கு இந்த உலகில் சிறந்த உதாரணம் இந்த நித்தியானந்தாவே.
முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு சொர்க்கத்தில் 72 மனைவிகள் கிடைக்கும் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ ஆனால் பூமியில் 720 பெண்களுடன் சொர்க்கத்தை அனுபவிப்பவர் இந்த நித்தியானந்தா.
இதை நாம் கூறினால் “அவருக்கு பல்லு இருக்கு பக்கோடா தின்கிறார். நீ ஏன் பொறாமைப்படுகிறாய்?” என்பார்கள் அவரது சீடர்கள். இல்லையென்றால் பெண் சீடர்களைவிட்டு கெட்ட வார்த்தைகளால் ஏச வைப்பார் நித்தியானந்தா.
அண்மையில் ஒரு பெண் சீடர் தான் 21 நாட்கள் நித்தியானந்தாவுடன் இருந்ததாகவும் அளவில்லா இன்பம் அடைந்ததாகவும் பொது வெளியில் கூறியுள்ளார்.
அவர் என்ன இன்பத்தை அடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் நித்தியானந்தாவுடன் இருந்த பெண் சீடர் ஒருவர் தன்னை நித்தியானந்தா பாலியல் வல்லறவு செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இங்கு வேதனை என்னவென்றால் ராஜராஜசோழ மன்னனை இயக்குனர் ரஞ்சித் அவமானப்படுத்திவிட்டார் என்று தானாகவே அழைத்து விசாரித்த நீதிமன்றம் , தன்னை நித்தியானந்தா பாலியல் வல்லுறவு செய்துவிட்டார் என்று ஒரு பெண் வழக்கு தொடர்ந்தும்கூட விசாரிக்காமல் இருந்து வருகிறது அதே நீதிமன்றம்.
அரசு, சட்டம், பொலிஸ், நீதிமன்றம் எல்லாம் தனக்கு ஆதரவாக இருக்கிறது என்ற தைரியத்தில் வாயில் வரும் பொய்களை எல்லாம் கூறி வருகிறார் நித்தியானந்தா.
தான் தியானம் இருப்பதை முடிப்பதற்காக சூரியன் உதிப்பதை 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்ததாக அண்மையில் கூறியுள்ளார் இந்த நித்தியானந்தா.
தன் படுக்கை அறையில் நடிகை ரஞ்சிழதாவுடன் சல்சா பண்ணியதை வீடியோ எடுத்ததை நிறுத்த முடியாத நித்தியானந்தா,
எடுத்த வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பானதை தடுத்து நிறுத்த முடியாத இந்த நித்தியானந்தா,
தன்னுடைய பெண் சீடரே தனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தடுத்து நிறுத்த முடியாத இந்த நித்தியானந்தா,
தன்னுடைய இடத்தில் சூரிய உதயத்தை 40 நிமிடம் தடுத்து நிறுத்தியுள்ளாராம். அதை நாம் நம்ப வேண்டுமாம்.
முதலில், சூரியன் உதிப்பதும் இல்லை. மறைவதும் இல்லை என்ற நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையை நித்தியானந்தா தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது, இவர் நிறுத்தியதாக கூறியது சூரியனை அல்ல. மாறாக பூமியின் சுழற்சியையே. ஏனெனில் பூமி தன்னைத்தானே சுற்றுவதால்தான் இரவு பகல் உண்டாகிறது. ஆனால் பூமியின் சுழற்சியை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தினால் பூமி அழிந்துவிடும்.
இரண்டாவது, இந்தியா முழுவதும் ஒரே நேரமே கணிக்கப்படுகிறது. இவர் கூறுவது போல் இவருடைய பீடம் இருக்கும் இடத்தில் ஒரு நேரமும் மற்ற இந்திய இடங்களில் இன்னொரு நேரமும் இல்லை. ( அதில வேற தான் சொல்வது தவறு என்றால் கூகிளில் பாருங்கள் என்று சவால் விடுகிறார்)
நித்தியானந்தா முட்டாளாக இருக்க அவருக்கு தாராளமாக உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தைப் பரப்ப அவருக்கு உரிமை இல்லை.
அவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஆயிரக் கணக்கில் சீடர்கள் உண்டு. அதுவும் புலம்பெயர் நாடுகளில் பல ஈழத் தமிழர்களும் சீடர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் அவரின் முட்டாள்தனமான கருத்துகளை நம்புவதோடு அவரை நம்பி பல லட்சம் ரூபா பணத்தையும் வழங்கி ஏமாந்து வருகின்றனர்.
இனியும் இதனை அனுமதிக்கக்கூடாது.

No comments:

Post a Comment