Tuesday, July 30, 2019

•இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று வைகோ கூறுவது சரியா?

•இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்கும் என்று வைகோ கூறுவது சரியா?
இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் பெற்று தந்திருப்பார் என்று வைகோ அவர்கள் இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் உருவாக்கியது போன்று இலங்கையில் இருந்து தமிழீழத்தை உருவாக்கியிருப்பார் என அவர் மேலும் கூறுகிறார்.
முதலாவது, தமிழீழம் பெற்று தரப்படும் என்று இந்திராகாந்தியோ அல்லது இந்திய அரசோ ஒருபோதும் கூறவில்லை.
இரண்டாவது, போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கும்போதுகூட தமிழீழத்தை ஆதரிக்க மாட்டோம் என்பதை இந்திய அரசு தெளிவாக கூறியிருக்கிறது.
உண்மை இப்படி இருக்க தன்னிடம் மட்டும் தமிழீழம் பெற்று தருவதாக இந்திராகாந்தி கூறினார் என்று வைகோ கூறுவது அதுவும் இத்தனை ஆண்டு கழித்து கூறுவது நம்ப முடியாததாகும்.
பாகிஸ்தானை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாத காரணத்தினால்தான் அதனை பலவீனமாக்க அதில் இருந்து பங்களாதேஷ் உருவாக இந்திராகாந்தி ஆதரித்தார்.
அதன்படி இலங்கையில் ஊடுருவதற்காகவே போராளிகளுக்கு உதவிகளை இந்திராகாந்தி வழங்கினார். ஒருவேளை முழு இலங்கையும் ஆக்கிரமிக்க முடியாமல் போயிருந்தால் தமிழீழம் பிரிக்க இந்திரா காந்தி உதவியிருப்பார்.
ஆனால் இலங்கை அரசு பாகிஸ்தான் போல் எதிர்ப்பு காட்டாமல் முழு இலங்கைகயையும் இந்தியா ஆக்கிரமிக்க அனுமதித்து விட்டது.
எனவேதான் இந்திரா காந்தி மட்டுமல்ல அவருக்கு பின்னாடி வந்த எந்த இந்திய பிரதமரும் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல போராளிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவி வருகின்றன.
முக்கியமாக, ஈழத்தில் தமிழர்கள் உரிமை பெறுவது தமிழக தமிழர்களுக்கு உந்துதலைக் கொடுக்கும். அதனால் தமிழக பிரிவினை எற்பட்டு இந்தியா சுக்கு நூறாக உடைந்து வடும் என்றும் அஞ்சுகிறது.
அதனால்தான் தமிழகத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைவிட மேலதிகமாக எந்த உரிமைகளையும் ஈழத் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி பாராளுமன்றத்தில் கூறிய வரிகள் இவை “ போராளிகள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை தமிழீழத்தை தருவதற்கு நாம் முன்வந்தாலும் இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும்”
ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு போராளிகளை அழிக்க உதவியதாக சிலர் கூறுகின்றனர். அது தவறு. ராஜீவ் காந்தி கொல்லப்படாவிட்டாலும் போராளிகளை அழிக்க இந்திய அரசு உதவி இருக்கும் என்பதே உண்மை.
இது வைகோ விற்கு நன்கு தெரியும். அப்படியிருந்தும் அவர் எதற்காக இப்போது இப்படி ஒரு பொய் கூறுகின்றார் என்று தெரியவில்லை.
அடுத்து அவர் கூறாமல் தவிர்த்த இன்னொரு விடயம் இந்திய அரசு புலிகளுக்கு தர முன்வந்த மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் போனதற்கு கருணாநிதியே காரணம் என்பது.
வி.பி சிங் பிரதமராக இருந்தபோது புலிகளுக்கு வழங்கும்படி 80 லட்சம் ருபா பணம் கலைஞர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. அவர் அதற்கு மருந்து பொருட்கள் வாங்கி அனுப்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் அனுப்பவில்லை. பணத்தை தான் பதுக்கி விட்டார்.
இதுகுறித்து புலிகளுக்கு கலைஞர் கருணாநிதி மீது கோபம் இருந்தாலும் அதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டவில்லை. ஆனால் தவறு செய்த கருணாநிதிக்கோ பயம் வந்துவிட்டது. புலிகள் ஒருவேளை தன்னைக் கொன்றுவிடுவார்களோ எனப் பயந்தார். அதனால்தான் வைகோ மீது கொலைப் பழியை சுமத்தி அதன் மூலம் தனக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு பெற்றுக்கொண்டார். இந்த உண்மைகள் அப்போது பலரும் அறிந்திருந்தார்கள். ஆனால் வைகோ ஏன் இத்தனை நாள் இதனைக் கூறாமல் இப்போது அதுவும் கலைஞர் பெயரை மறைத்து கூறுகின்றார் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment