Saturday, September 26, 2020

ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழர்கள் ஏன் தோழர் தமிழரசனை நினைவு கூரவேண்டும்? செப்-1, இன்று தோழர் தமிழரசனின் 32 வது நினைவு தினம் ஆகும். •அவர் தமிழ் தேசியத்தை முன்வைத்தார் •அவர் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினார். •அவர் அதற்காக தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டினார். •அவர் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார். •அவர் மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைகளை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். அதனால்தான் தமிழகம் எங்கும் அவர் மக்களால் இன்று நினைவு கூரப்படுகிறார். தமிழக மக்கள் நினைவு கூர்வது சரி. ஆனால் ஈழத் தமிழர்கள் ஏன் அவரை நினைவு கூரவேண்டும்? முதலாவது, அவர் ஒருவர் மட்டுமே இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தார். இரண்டாவது, இந்திய அரசு ஈழத் தமிழருக்கு நண்பன் இல்லை. அது ஒரு எதிரி என்று அவர் உறுதியாக கூறினார். மூன்றாவது, தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் என்று கூறியது மட்டுமன்றி அதற்காக தானே முன்வந்தார். நான்காவது, ஈழப் போராளிகள் தமிழக தலைவர்களை நம்புவது தவறு. அவர்கள் தமிழக மக்களை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜந்தாவது, தமிழக மக்களும் அடிமையாக இருக்கிறார்கள். அவர்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும் என்றார். இவ்வாறு தோழர் தமிழரசன் தவிர வேறு யாரும் கூறியது கிடையாது. எனவேதான் ஈழத் தமிழருக்கு உறுதியாக ஆதரவு தந்த அவரை ஈழத் தமிழர் நினைவு கூர வேண்டும் என்கிறோம். ஆனால் இந்திய அரசின் விசுவாசியான சிலர் அவரை கொலைகாரன் என்கிறார்கள். இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக அவர் குண்டு வைத்ததால்தான் அவர் மீது இக் கொலைகாரன் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இதுகூடத் தெரியாமல் நன்றி கெட்டத்தனமாக சிலர் விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் வருகையை தடுக்க முடியாது என்பதுபோல் எத்தனை அவதூறுகள் செய்தாலும் தோழர் தமிழரசன் புகழ் மங்கிவிடாது.

No comments:

Post a Comment