Saturday, September 26, 2020

ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தானா

•ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தானா இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது? ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி முழு இலங்கையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இந்திய அரசின் திட்டமாகும். எனவே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவியிருக்காது என்பதே உண்மை. இந்திய பிரதமரைக் கொன்றதால்தான் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இதுவும் தவறாகும். ஏனெனில் ராஜீவ்காந்தி கொல்லப்படும்போது அவர் பிரதமர் இல்லை. முன்னாள் பிரதமர் மட்டுமே. முன்னாள் பிரதமரைக் கொன்றதற்காக ஒரு இயக்கத்தை சட்டப்படி தடை செய்ய முடியாது. தமிழர் மீட்சிப்படை என்ற இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியதாக கூறியே புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளனர். ஆனால் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சீக்கிய இனத்தவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும் சீக்கிய இனம் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சி இரண்டுமுறை பிரதமராக தேர்ந்தெடுத்தது. அடுத்து விஜேமுனி என்ற சிங்கள சிப்பாய் தாக்கியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தால் இன்று வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும் என சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறு. ஏனெனில் ராஜீவ்காந்தி செத்திருந்தாலும் ஜேஆர் ஜெயவர்த்தனா தொடர்ந்தும் இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்திருப்பார். இங்கு வேடிக்கை என்னவெனில் தான் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தாக்கினேன் என்று அந்த சிங்கள சிப்பாய் கூறியிருந்தும் அவருக்கு வெறும் 6 வருட தண்டனையே வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அவர் சிறையில் இருக்கும்போது தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் “சிறைச் சோறு சாப்பிடுவதற்காக நான் வருந்தவில்லை. மாறாக ராஜிவ் காந்தி சாகாமல் தப்பிவிட்டான் என்பதற்காகவே வருந்துகிறேன்” என்று எழுதியிருந்தான். இவ்வாறு அந்த சிங்கள சிப்பாய் சிறையில் இரண்டு வருடங்கள் மட்டுமே கழித்திருந்தவேளையில் அவருக்கு ஜனாதிபதி பிரேமதாசா பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். தம் பிரதமரைத் தாக்கிய நபரை இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது குறித்து இந்திய அரசு கொஞ்சம்கூட ஆத்திரப்படவும் இல்லை. ஆட்சேபனை தெரிவிக்கவும் இல்லை. சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்த சிப்பாய் இலங்கை இந்திய ஒப்பந்தம்மூலம் பெறப்பட்ட மாகாணசபையைக் கலைப்பதே தமது குறிக்கோள் என செயற்பட்டு வருகிறார். அதற்காக மாகாணசபையை ஒழிப்பேன் என்று கூறும் இன்னொரு இனவாதியான சரத் வீரசேகர என்பவருடன் சேர்ந்து செயற்படுகிறார். இப்போது மகாணசபைகளுக்கான அமைச்சு பொறுப்பை இந்த சரத்வீரசேகர என்பவரிடமே மகிந்த ராஜபக்சா ஒப்படைத்திருக்கிறார். அவரும் பதவியேற்றவுடன் கூறிய முதல் வார்த்தை விரைவில் இந்த மாணாண சபைகளை ஒழிப்பேன் என்பதே. இதனால் சம்பந்தர் ஐயா குழுவினர் ஓடிச்சென்று கொழும்பில் இருக்கும் இந்திய தூதரிடம் முறையிட்டனர். இந்திய தூதரும் வழக்கம்போல் ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் என ஒரு பேட்டியை வழங்கினார். ஆனால் அதைக்கூட இந்த அமைச்சர் சரத்வீரசேகரவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே “இலங்கை இறைமை உள்ள நாடு. வெளிநாட்டு தூதர்கள் இதில் தலையிட முடியாது” என ஆணவமாக கூறினார். மாகாணசபை என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. எனவே அந்த மாகாணசபை நீக்கப்படுமானால் அது குறித்து கேட்க இந்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. இதனைச் சுட்டிக்காட்டி கேட்டிருக்கவேண்டிய இந்திய தூதரோ அல்லது இந்திய அரசோ எதுவும் கூறாமல் மௌனமாகிவிட்டனர். ராஜீவ் காந்தியை கொல்வதற்காக தாக்கியவர்கள் இப்போது அந்த ராஜீவ் காந்தி செய்த ஒப்பந்தம் மூலம் பெற்ற மாகாணசபையையே நீக்க துணிந்துவிட்டனர். இது குறித்து எந்த கோபமோ அக்றையோ இன்றி இந்திய அரசு இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்ற கோபத்தில்தான் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது என நம்மவர்கள் சிலர் உபதேசம் செய்கின்றனர். அவர்களுக்கு நாம் கூறுவது “முடிந்தால் அந்த சிங்கள சிப்பாயின் மூத்திரத்தை கொஞ்சம் வாங்கி பருகுங்கள். அதன்பின்பாவது உங்களுக்கு புரிகிறதா என பார்ப்போம்”.

No comments:

Post a Comment