Saturday, February 26, 2022

என்றும் நினைவில் இருக்கும்

•என்றும் நினைவில் இருக்கும் தில்லையம்பல கோவில் பூசாரியார். கரவெட்டிக்கு அருகில் வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் கோவில் தில்லையம்பல பிள்ளையார் கோவில். வீட்டில் வளர்க்கும் மாடு கன்று போட்டால் ஆடு குட்டி போட்டால் முதல் பாலை இந்த கோவிலுக்கு வழங்குவது மக்கள் வழக்கம். யாழ் மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டமாக வந்து இந்த கோவிலில் பொங்கல் வைப்பார்கள். கீழே படத்தில் இருப்பவர் பெயர் கந்தப்பு. இவர்தான் இந்த தில்லையம்பலகோவில் பூசாரியாக பல காலம் இருந்தவர். 1984ல் மன்னாரில் இருந்து வந்த இளைஞர்களுக்கு கண்ணிவெடி மற்றும் வெடி குண்டு பயிற்சிகளை இந்த கோவிலுக்கு அருகில் மேற்கொண்டோம். பயிற்சி முடிய இந்த பூசாரியார் தந்த பொங்கல், மோதகம் வடை பழம் எல்லாம் நாம் மகிழ்வுடன் சாப்பிட்டு சென்றோம். ஆனால் அடுத்தநாள் பலாலியில் இருந்து வந்த ராணுவம் சுற்றிவழைத்து பூசாரியாரை பிடித்துவிட்டது. எம்மை காட்டி தரும்படி அவரை மிரட்டியது. அவருடைய நெஞ்சில் துப்பாக்கியை வைத்து எங்களை காட்டித் தரும்படியும் இல்லையேல் கொன்றுவிடுவதாக ராணுவம் மிரட்டியது. நானும் அவருடைய கரவெட்டி ஊரைச் சேர்ந்தவன். என் தாய் தந்தையர் வீடு எல்லாம் அவருக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் உயிர் ஆபத்து நிறைந்த அந்த வேளையிலும் எம்மை காட்டிக்கொடுக்கவில்லை. எல்லோரும் போராளிகளே போராட்டம் செய்ததாக கூறுகின்றார்கள். ஆனால் இத்தகையவர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இல்லையேல் போராட்டம் ஒருநாள்கூட நீடித்திருக்க முடியாது என்பதே உண்மை. இவர்கள் மகத்தானவர்களே.

No comments:

Post a Comment