Saturday, February 26, 2022

இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

•இலங்கை மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா? ஆங்கிலேயரிடமிருந்து 04.02.1948 யன்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த சுதந்திரம் போராடிப் பெற்றதில்லை என்றும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது கொசுறாக இலங்கைக்கும் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் கொடுத்துவிட்டு சென்றதாக அந்த சிலர் கூறுகிறார்கள். இந்த சிலரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம் (1) இலங்கை மக்கள் போராடாமலே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர் என்றால் அதற்கு முன்னர் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் எப்படி இலங்கையை விட்டு வெளியேறினார்கள்? (2) இந்தியாவில் கோவாவை 300 வருடம் ஆண்ட போர்த்துக்கேயர் இலங்கையில் நூறு வருடத்தில் எப்படி வெளியேற்றப்பட்டார்கள்? (3) போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் ஏன் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை? (4) ஆங்கிலேயர்கூட இறுதியாகத்தானே கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடிந்தது. அதற்கு என்ன காரணம்? (5) இந்தியாவில் இருந்து 265 மைல் தொலைவில் உள்ள லட்சதீவுகளையும் 740 மைல் தொலைவில் உள்ள அந்தமான் தீவையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்கள் வெறும் 20 மைல் தொலைவில் உள்ள இலங்கையை ஏன் இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை? (6) மன்னர் காலத்தில்கூட இலங்கை தமிழக மன்னர்களின் பிடியில் நீண்டகாலம் இருக்கவில்லையே. அது ஏன்? மேற்கண்ட வினாக்களுக்கு விடை தெரிந்து கொண்டால் இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை அந்த சிலரால் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இலங்கை சுதந்திரம் என்பது காலனி நாடாக இருந்தது நவகாலனி நாடாக மாறியுள்ளது. அப்படியென்றால் இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது? • இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது. • தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது . • தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment