Sunday, October 1, 2017

தோழர் தம்பிராசா அவர்கள் கருத்து

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
3 hrs
“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் தம்பிராசா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
தோழர் தம்பிராசா ஒரு மனநல மருத்துவர். அவர் தற்போது இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
மனநோய் குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அவர் மனநலம் குறித்து தமிழில் எழுதும் பல கட்டுரைகள் தமிழ்இந்து வில் பிரசுரமாகி வருகின்றன.
நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” மற்றும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” ஆகிய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும் தோழர் தம்பிராசாவே செய்துள்ளார்.
தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் செயற்பட்ட தோழர் தம்பிராசா அவர்கள் இன்றும் மார்க்கிச லெனினிய மாவோயிச சிந்தனையின்; உணர்வாளராக செயற்படுகின்றார்.
எனது “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் தம்பிராசா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
தோழர் பாலனின் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை முன்வைத்து......
1980களில் இலங்கைத் சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத அடக்குமுறை மும்முரமடைந்தபோது அதன் எதிர்வினையாக தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற அரசியல் பேசிவந்த தமிழ் அரசியல் கட்சிகளை புறந்தள்ளி பெரும் வீச்சோடும் வீரியத்தோடும் கிளர்ந்தெழுந்தார்கள். விளைவாக, முப்பதுக்கு மேற்பட்ட குழுக்கள் உருவாகின.
பாராளுமன்ற பாதையை நிராகரித்த இவர்கள் இந்திய துணைக் கண்டத்தை, குறிப்பாக தமிழ்நாட்டை, பின்தளமாகக் கொண்டு தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அன்றிருந்த ஆதரவுடன் அங்கிருந்து செயல்படத் தொடங்கின.
பெரும்பாலான அமைப்புகள் இந்திய அரசுடனும், ‘ரோ’ என்று அழைக்கப்படும் அதன் உளவுத் துறையின் ஆதரவோடும் தம் செயல்பாடுகளை முன்னெடுத்தன. ஆனால் இக்குழுக்கள் இந்திய புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து செயல்பட முன்வரவில்லை.
இதற்கு விதிலக்காக தோழர் பாலன் அங்கத்தவராக இருந்த தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை நக்சல்பாரிகள் என்று இந்திய ஊடகங்களால் அழைக்கப்படும் இந்திய புரட்சிகர மார்க்சிச லெனினிச கட்சியின் தமிழ்நாட்டு அமைப்பான தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி என்ற அமைப்போடு இணைந்து சில காலம் செயல்பட்டது என்பதும் அதற்கு இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சி (பீகிங் சார்பு) தலமையுடன் நேரடித் தொடர்பு இருந்து வந்தது என்பது இதுவரை பலர் அறியாத செய்தி.
தோழர் சண்முகதாசன் நக்சல்பாரி இயக்கத்தை கடுமையாக ஆனால் தோழமையுடன் விமர்சித்தார். இந்தியத் தோழர்கள் இதை ஏற்றுக்கொண்டு அவர் எழுதிய இந்த விமர்சனத்தை மக்கள் பாதை (Peoples War) என்ற சஞ்சிகையில் பிரசுரித்தார்கள்.
இலங்கையிலும் இந்தியாவிலும் புரட்சிகர இயங்களுக்குள் தீவிரமான கருத்துமோதல்கள் நடந்துகொண்டிருந்த சமயம் அது. நக்சல்பாரிகளின் அழித்தொழிப்பு தந்திரோபாயத்தை தோழர் சண் ஏறுக்கொள்ள மறுத்ததால் இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) இரண்டாகப் பிளவுபட்டது.
இதை விரிவாக இன்னொரு சமயம் விவாதிக்கலாம். இப்போதைக்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது தோழர் சண் நக்சல்பாரி இயக்கத்துக்கு எதிரானவர் என்று சிலர் முன்வைத்த கருத்தை இந்த நூல் பொய்ப்பிக்கிறது என்பதே.
தோழர் பாலனின் மூன்றாவது நூலான ‘ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’ என்ற இந்த பிரசுரம் தரும் பல உற்தகவல்களில் இதுவும் ஒன்று
. “உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்!” என்ற கம்யுனிச அறைகூவலை முன்வைக்கும் இலங்கையச் சேர்ந்த இடதுசாரி இயக்கங்கள் செய்யாத, செய்யத் துணியாத, ஒரு முன்னெடுப்பை பாலனும் அவர் தோழர்களும் முனைப்புடன் மேற்கொண்டதை இந்த நூல் பதிவு செய்கிறது.
தோழர் தமிழரசனின் நினைவாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் காணப்படும் பல அரிய சங்கதிகளில் இதுவும் ஒன்று.
இந்திய புரட்சிகர இயக்கங்களும் இலங்கைத் தமிழ் போராளிகளும்
1967ல் மேற்கு வங்கத்தில் தீப்பொறியென உதித்த நக்சல்பாரி எழுச்சி மூர்க்கத்தனமாக முறியடிக்கப்பட்ட பின்னர் இந்திய புரட்சிகர மாக்சிச லெனினிச இயக்கம் இன்றுவரை மரித்துவிடவில்லை. அது இன்றும் உயிர்த்துடிப்புடன் முனைப்புடன் செயல்படுகிறது.
இந்திய இராணுவத்தினரதும் உளவுத் துறையினரதும் அடக்கு முறைகளையும் அட்டகாசங்களுக்கு மத்தியிலும் இன்றும் சரி, 1980ம் சரி, தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற பிராந்தியங்களிலும் புரட்சிகர இயக்கங்கள் நிலை கொண்டிருந்தன, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன, (இது இப்போதும் தொடர்கிறது).
இவர்களோடு இணைந்து போராட முன்வந்த இலங்கையின் புரட்சிகர அமைப்பான மேற்கூறிய ‘பேரவை’ எவ்வாறு தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியுடனும் அதன் தலைவர் தோழர் தமிழரசனுடனும் இணைந்து இராணுவப் பயிற்சி பெற்றது என்பதையும் இந்த நூலின் காணலாம்.
இந் நூல் தோழர் தமிழரசனின் புரட்சிகர வாழ்க்கையை மட்டும் கூறவில்லை. அன்னாரின் “மக்களோடு வாழ், அவர்களுடன் சேர்ந்து செயல்படு” என்ற அரசியல் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது.
இந்தியா அரசை இலங்கையைச் சேர்ந்த தமிழ் இயக்கங்கள் ஒருபோதும் நம்பக் கூடாது என்ற அவரது தொலை நோக்குப் பார்வையை தோழர் பாலன் இந்த நூலில் வியந்து பாராட்டியுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.
இந்தியாவின் கொடிய கரங்கள் அமெரிக்க ஆணைக்கு ஏற்ப இலங்கைத் தீவைச் சுற்றி வளைத்து ஆக்கிரமித்து வருவதையும் இந்த நூல் அழுத்திக் கூறுகிறது.
தாம் இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வளங்கும் இயக்கங்களிடையே சகோதர யுத்தத்களை துண்டிவிட்டும் உளவுத்திறையினரின் தந்திரங்கள், தாம் எதிரிகள் எனக் கருதும் நபர்களை இந்த இயக்கங்களைக் கொண்டு அழித்தொழிக்கும் உத்திகள் (உ.ம். தோழர் நெப்போலியனின் கொலை), புரட்சிகர சக்திகளுக்கு அவப்பெயரை உண்டாக்க அவர்கள் பேற்கொள்ளும் ஏமாற்று வேலைகள் ஆகியவற்றைத் இந்நூல் தோலுறித்துக் காட்டுகிறது.
தோழர் தமிழரசனின் கொலையை இந்திய உளவுப் படை போலிஸ் ஆகிய அமைப்புகள் எவ்வாறு திரித்துக் கூறி அவரையும் அவர் சார்ந்த புரட்சிகர இயக்கைத்தையும் கொச்சைப்படுத்தின, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி களங்கம் கற்பித்தன என்பதையும் பாலன் அம்பலப்படுத்துகிறார்.
இதுபோக, பல வாசகர்கள் அறிந்திராத தமிழ்நாட்டுப் புரட்சிகர போராளிகளான தோழர்கள் கலியபெருமாள், சுந்தரம், லெனின் ஆகியோரது புரட்சிகர பணிகளையும் தியாகங்களையும் தொட்டுச் செல்கிறது இந்த நூல்.
இதேபோல, நூலை ஆழ்ந்து வாசிப்பவர்கள் இந்தக் கட்டத்தின் பாலன் தோழரின் புரட்சிகர செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளலாம். இந்த புத்தகத்துடன் இவர் முன்னர் எழுதிய சிறப்பு முகாம்கள் நூலையும் கூட வைத்துப் பார்க்கும்போது இந்திய புலனாய்வுத்துறை கையாளும் பல தந்திரங்கள் புரிய வரும்.
தோழர் பாலனுக்கும் தமிழரசனின் இயக்கத்துக்கும் இருந்த தொடர்பை அறிந்துகொண்ட காவல்துறை கியூ பிரிவு உளவுப் போலீசார் அவரை அச்சுறுத்தி கருணாநிதியின் அன்றைய மாநில அரசைக் கலைக்க இவரைப் பயன்படுத்தப் முயற்சித்தது என்பதும் அந்த சதியில் பங்கெடுக்க மறுத்தனால் அவரை எட்டு ஆண்டுகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதையும் இந்த நூல் தெளிவு படுத்துகிறது.
புரட்சிகர கோட்பாடு விவாதங்கள்
இந்த நூலின் பின்புலமாக அமைந்துள்ள அரசியல் தத்துவார்த்த கோட்பாடுகளை சுட்டிக் காட்டுவது முக்கியம். ஏனென்றால் இன்று இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும், குறிப்பாக இனப் பிரச்சினைக்கும் தீர்வு என்ன என்பது பற்றி பல முரண்பட்ட கருத்துகள் நிலவிவருகின்றன.
இந்த நூல் முன்வைக்கும் கருத்துகளையும் அணுகமுறையையும் பின்வருமாறு சாரமாகக் கூறலாம்:
•பாராளுமன்றத்தின் வழியாக இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது.
•இதை மக்கள் போராட்டங்களின் மூலமாகவே பெற முடியும்.
•இந்த மக்கள் போராட்டமானது இலங்கையின் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியாதாக, பரந்துபட்ட ஒரு போராட்டமாக அமைய வேண்டும்.
•இலங்கைத் தீவை முற்றுகையிட்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.
•தமிழ்த் தேசியத்தை ஒரு வரியில் நிராகரித்துவிட முடியாது. இனங்களின் சுயநிர்ணய உரிமையை அரசு ஏற்றுக்கொள்ள போராட வேண்டும்.
•இலங்கையின் புரட்சிகர இயக்கங்கள் (இடதுசாரி இயக்கங்களிடையே பெரும் பீடையாக விளங்கி வரும்) குழுவாதத்தை (sectarianism) தவிர்த்து ஒரு பரந்த முன்ணணியாக செயல்பட வேண்டும்.
•இலங்கையின் புரட்சிகர இயக்கமானது உலக புரட்சிகர இயக்கங்களுடன் - குறிப்பாக இந்திய புரட்சிகர இயக்கங்களுடன்- இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
•இந்த போராட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
ஒரு நூல் மதிப்புரையில் மேலே கூறப்பட்ட ஒவ்வொரு பொருள் பற்றியும் அழமாகவும் விரிவாகவும் விவாதிக்க இயலாது. அதற்கு வேறொரு தளம் தேவை.
இது பற்றிய கருத்துகளை விவாதிக்க இந்த நூல் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமைலாம் என்பதிலேயே தோழர் பாலனின் “ஒரு ஈழப் போராளியில் பார்வையில் தோழர் தலிழரசன்” முக்கியத்தும் பெறுகிறது என்று நான் திடமாக நம்புகிறேன்

No comments:

Post a Comment