Monday, October 30, 2017

கிழக்கில் உதயம் ஒவ்வொருநாளும் நிகழ்கிறது ஆனால் மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை!

•கிழக்கில் உதயம் ஒவ்வொருநாளும் நிகழ்கிறது
ஆனால் மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை!
கிழக்குமாகாணத்தில் தாழங்குடா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெண் நுண்கடன் நிறுவனத்தின் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் யாருமே அதுகுறித்து அக்கறை கொள்ளவில்லை.
ஒருவேளை அவர் தமிழ்நாட்டில் நடந்ததுபோல் மட்டக்கிளப்பு கச்சேரி முன்பு தீக்குளித்து இறந்திருந்தால் கவனத்தைப் பெற்றிருப்பாரோ தெரியவில்லை.
கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல வடமாகாணத்திலும் கடன் தொல்லையால் மக்கள் பலர் தற்கொலை செய்கின்றனர்.
ஆனால் வடமாகாணசபைக்கோ அல்லது இலங்கை அரசுக்கோ இது குறித்து கொஞ்சம்கூட அக்கறை இல்லை.
மக்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் வேளையில் 15 வடமாகாணசபை உறுப்பினர்களும் 5 அதிகாரிகளும் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
மாகாண சபையின் காலம் முடியப் போகுது. ஆனால் உறுப்பினர்கள் மாகாணசபையை எப்படி இயக்குவது என்பது பற்றி படிக்க இந்தியா சென்றுள்ளார்களாம்.
இதே மாகாணசபை உறுப்பினர்களுக்குத்தான் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா நீதி அமைச்சருடன் ரஸ்சியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதற்கு முன்னர் கனடா சென்று தனக்கு நிதி சேகரித்தார்.
தமது வழக்கை வவுனியாவுக்கு மாற்றுமாறு கோரி 3 அரசியல் கைதிகள் 30 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி சிங்கள இளைஞர் ஒருவர் அரை நிர்வாண போராட்டம் நடத்தியுள்ளார்.
ஆனால் சம்பந்தர் அய்யாவோ தன்னை ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் நிர்வாணமாக சோதனை செய்தாலும் அதுகுறித்து கூச்சமின்றி தீபாவளி விருந்துக்கு ஓடுகிறார்.
இதே சம்பந்தர் அய்யாவின் இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்கவென பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை மூலம் 4 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 6459 மில்லியன் அடுத்த வருடம் இந்த தொகை 9983 மில்லியனாகஅதிகரிக்கப்படவுள்ளது. அதாவது 3527 மில்லியன் அதிகரிக்கப்படவுள்ளது.
பிரதமருக்கு இந்த வருடம் 1254 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்துக்காக இத்தொகை 1772 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் பட்ஜட்டில் துண்டு விழும் தொகை 1800 பில்லியனை தாண்டியுள்ளது. அதேவேளை ஜனாதிபதிக்கு 16 கோடி ரூபாவுக்கு சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கடன் தொல்லையால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் அது குறித்து கவலை இன்றி தமது நலன்களையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment