Sunday, January 22, 2017

•தாய்!

•தாய்!
“தாய்” என்ற ரஸ்சிய நாவலில் வரும் அம்மாவை யாரும் மறக்க முடியாது. தன் மகனின் போராட்டத்திற்கு அவர் செய்யும் உதவிகள் அதில் சிறப்பாக சொல்லப்பட்டது.
அதேபோல் ஈழத்திலும் பல தாய்மார்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள் போராளிகளுக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
1984ல் ராணுவ சுற்றிவளைப்பிற்கு அஞ்சி நானும் தோழர்களும் கரவெட்டி சோனப்பு வயல் வெளியில் பதுங்கியிருந்தபோது ராணுவத்திற்கு தெரியாமல் சோறு கொண்டு வநது தந்த நண்பன் சோதிலிங்கத்தின் தாயார் பாறி அக்கை யின் ஞாபகம் இன்றும் இருக்கிறது.
இன்று அப்படி ஒரு தாயை நான் தமிழகத்தில் அலங்காநல்லூரில் காண்கிறேன். பொலிசாரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போராடும் இளைஞர்களுக்கு வாளியில் கஞ்சி கொடுத்த அந்த தாயை பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அந்த தாய், தான் உணவு உண்டாரா தெரியவில்லை. நாளைக்கு அந்த தாயக்கு உணவு வீட்டில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் தன்னிடம் இருந்த உணவை பட்டினியில் இருந்த இளைஞர்களுக்கு கொடுக்க அவர் தயங்கவில்லை.
போராடிய இளைஞர்கள் யார் என்றும் அந்த தாய்க்கு தெரிந்திருக்காது. அந்த இளைஞர்கள் என்ன சாதி , என்ன மதம் என்றுகூட அந்த தாய் அறிந்திருக்கமாட்டார்.
அவர் அறிந்து கொண்டது எல்லாம் அந்த இளைஞர்கள் தமிழர்கள். அவர்கள் தமிழருக்காக போராடுகின்றார்கள் என்பது மட்டுமே.
அதனால்தான் அந்த தாய் பொலிசாருக்கும் அஞ்சாமல் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்து அந்த இளைஞர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த தாய்கள் இருக்கும்வரை, இந்த தாய்களின் ஆதரவு இருக்கும்வரை இந்திய அரசால் போராட்டத்தை ஒருபோதும் நசுக்க முடியாது.

No comments:

Post a Comment